நியூசிலாந்து கேப்டனாக தேர்வு
நியூசிலாந்து மகளிர் அணியின் ஆல்-ரவுண்டர் சோபி டிவைன், தற்போது அணியின் முழுநேர கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டில் ஒயிட் பெர்ன்ஸ் அணியின் இடைக்கால கேப்டனாக நியமிக்கப்பட்ட சோபி, தன்னுடைய சிறப்பான ஆட்டத்தையும் அணியை சிறப்பாக வழிநடத்தியும் தனது திறமையை வெளிப்படுத்தினார். இதையடுத்து தற்போது அவர் முழுநேர கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மகளிர் உலக கோப்பையில் ஆட்டம்
இதுகுறித்து நியூசிலாந்து கிரிக்கெட் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது குழந்தை பேற்றுக்காக விடுமுறையில் உள்ள அமி சாட்டர்த்வைத் துணை கேப்டனாக தேர்வாகியுள்ளார். சோபி டிவைன் தலைமையிலான இந்த அணி அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலக கோப்பை தொடரை எதிர்கொள்ளவுள்ளது.
சிறப்பான பார்ட்னர்ஷிப்
இதனிடையே, இது மிகப்பெரிய பெருமை என்று சோபி டிவைன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். கடந்த சீசனில் இடைக்கால கேப்டன்ஷிப்பை தான் மிகவும் மகிழ்ச்சியுடன் எதிர்கொண்டதாகவும் அடுத்ததாக அமியுடன் இணைந்து பணியாற்ற விருப்பத்துடன் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். தாங்கள் இருவரும் இணைந்து தலைமையில் சிறப்பான பார்ட்னர்ஷிப்பை மேற்கொள்வோம் என்றும் கூறியுள்ளார்.
டிவைன் குறித்து பயிற்சியாளர்
மீண்டும் சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்கு தான் மிகவும் ஆர்வத்துடன் உள்ளதாக அமி சாட்டர்த்வைத் தெரிவித்துள்ளார். நியூசிலாந்து தலைமை பயிற்சியாளர் பாப் கார்ட்டர் கூறுகையில், டிவைன் வலிமையான தலைமை பண்பை கொண்டவர் என்றும் தன்னுடைய பிரத்யேக ஸ்டைல் மூலம் சிறப்பாக செயல்படுவார் என்றும் தெரிவித்துள்ளார்.