என்ன நடந்தது?
பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி கடந்த ஜனவரி 2ஆம் தேதி காலையில் உடற்பயிற்சி செய்த போது இதயத்தில் ஏற்பட்ட வலி மற்றும் மயக்கம் காரணமாக கொல்கத்தாவில் உள்ள வுட்லாண்ட்ஸ் மருத்துவமனைக்கு விரைந்தார். அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.
ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை
இதை அடுத்து அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஜனவரி 7 அன்று கங்குலி வீடு திரும்பினார். அவர் நல்ல நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் கூறி இருந்தனர். கங்குலி ஓரளவு இயல்வு நிலைக்கு திரும்பி இந்திய அணியின் ஆஸ்திரேலிய வெற்றி குறித்து சில பதிவுகளை பகிர்ந்தார்.
மருத்துவமனைக்கு விரைந்தார்
இந்த நிலையில், நேற்று இரவு அவருக்கு மீண்டும் இதயத்தில் லேசான வலி ஏற்பட்டு இருக்கிறது. மீண்டும் மதிய வேளையில் இதயத்தில் வலி ஏற்பட்டு இருக்கிறது. இதை அடுத்து அவர் கொல்கத்தாவில் உள்ள அப்போல்லோ மருத்துவமனைக்கு விரைந்தார்.
20 நாட்கள்
மேற்கொண்டு தகவல்களுக்காக அவரது ரசிகர்கள் காத்துக் கொண்டுள்ளனர். மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய 20 நாட்களில் அவருக்கு மீண்டும் வலி ஏற்பட்டு இருக்கிறது. இது அவரது நலம் விரும்பிகளை கவலை அடையச் செய்துள்ளது. இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அவருக்காக பிரார்த்தனை செய்து பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர்.