முன்னாள் வீரர்கள் ஆட்டோகிராப்
கொல்கத்தாவில் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ள பகலிரவு போட்டியின் இடைவேளையின்போது பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பல முன்னாள் வீரர்கள் பங்கேற்ற நிலையில், அவர்கள் தங்களது ஆட்டோகிராப்பை பதிவு செய்தனர்.
முன்னாள் வீரர்கள் மகிழ்ச்சி
நிகழ்ச்சியில் பங்கேற்ற அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங், சச்சின் டெண்டுல்கர், விவிஎஸ் லக்ஷ்மன் உள்ளிட்டோர் ஈடன் கார்டன் மைதானத்தில் ஆடிய தங்களது அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர்.
பல சாதனை போட்டிகள்
ஈடன் கார்டன் மைதானம் இந்திய கிரிக்கெட் ஆட்டத்தின் பல்வேறு சிறப்பு போட்டிகளுக்கு சாட்சியாக உள்ளது. 1993ல் ஹீரோ கோப்பை போட்டியில் கடைசி ஓவரில் சச்சின் அடித்த 6 ரன்கள், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக 12 ரன்களில் அனில் கும்ப்ளே எடுத்த 6 விக்கெட்டுகள் போன்ற பல்வேறு மெமரிகளை முன்னாள் வீரர்கள் பகிர்ந்து கொண்டனர்.
வரலாற்று தினத்திற்கு ஏற்ற மைதானம்
தாங்கள் கிரிக்கெட்டில் பிசியாக இருந்த நேரத்தில்கூட இத்தகைய சந்திப்பு தங்களுக்கு வாய்க்கவில்லை என்று அனில் கும்ப்ளே மகிழ்ச்சி தெரிவித்தார். மேலும் இந்தியாவின் முதல் பகலிரவு போட்டியை நடத்த ஈடன் கார்டன் மைதானத்தை விட வேறு சிறந்த இடம் வாய்க்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஹாட்ரிக்
ஈடன் கார்டன் மைதானம் மீதான பழைய நினைவுகளை பகிர்ந்துகொண்ட ஹர்பஜன் சிங், கடந்த 2001ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் தான் அடித்த ஹாட்ரிக் விக்கெட்டுகள் குறித்த தன்னுடைய நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.
கங்குலியே தன்னுடைய நிரந்தர கேப்டன்
மேலும் பேசிய ஹர்பஜன் சிங், தான் 100 கேப்டன்கள் கீழ் விளையாடினாலும், சவுரவ் கங்குலியே தனது நிரந்தர கேப்டன் என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
பார்ட்னர்ஷிப்பில் அடித்த 376 ரன்கள்
இதையடுத்து பேசிய சச்சின் டெண்டுல்கர், ஹர்பஜன் சிங் வீழ்த்திய ஹாட்ரிக் விக்கெட்டுகள், அந்த கேமையே மாற்றியதாக தெரிவித்தார். இதேபோல, லக்ஷ்மன் மற்றும் டிராவிட் பார்ட்னர்ஷிப்பில் அடித்த 376 ரன்களும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான அந்த போட்டியில் இந்தியா வெற்றியடைய உதவியதாகவும் தெரிவித்தார்.