குறைந்த அளவில் போட்டி
கொரோனா அச்சுறுத்தல் தொடங்கியதில் இருந்து இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு பெரிய அளவில் போட்டிகள் நடைபெறவில்லை. ஆனால் இந்திய ஆண்கள் அணி சீரான இடைவெளியில் தொடர்களில் விளையாடி வருகிறது. கடந்த 2020 ஐபிஎல் தொடங்கி, ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம், இங்கிலாந்துக்கு எதிரான தொடர், 2021 ஐபிஎல் தொடர் என நடந்தது. இதனால் பிசிசிஐ ஆண்கள் அணிக்கு மட்டும் முக்கியத்துவம் வழங்குவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
விளக்கம்
இந்நிலையில் இதற்கு பதிலளித்துள்ள கங்குலி, நாம் என்ன செய்வது? இந்த கொடிய கொரோனா வைரஸுடன் நாம் வாழ்ந்து வருகிறோம். இதனால் தான் மகளிர் ஐபிஎல் தொடர் ரத்து செய்யப்பட்டு செப்டம்பருக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆண்களுக்கு அமைத்தது போலவே மகளிருக்கும் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர் நடைபெற்றது. தென்னாப்பிரிக்க அணி இந்திய வருகை தந்து ஆடியது.
அடுத்தடுத்து போட்டிகள்
இதே போல் 8 வருடங்கள் கழித்து இந்திய மகளிர் அணி டெஸ்ட் கிரிக்கெட் ஆடவுள்ளது. இதற்காக வரும் ஜூன் 2ம் தேதி இங்கிலாந்து செல்லும் அவர்கள் ஒரு டெஸ்ட் போட்டி, 6 ஒருநாள் போட்டி டி20 போட்டிகளில் ஆடவுள்ளது. அதனை தொடர்ந்து ஆஸ்திரேலிய தொடர் உள்ளது. அதன் பின் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் இந்தியா வர திட்டம் போடப்பட்டுள்ளது.
இனி குற்றச்சாட்டு வருமா?
இந்திய மகளிர் அணிக்கு பல்வேறு தொடர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இங்கிலாந்து செல்லும் போது மிகப்பெரும் தொடர் உள்ளது. இதெல்லாம் கேட்ட பிறகுமா என்னை ஆண்கள் அணிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கிறேன் என குற்றம்சாட்டுவீர்கள் என கங்குலி தெரிவித்துள்ளார்.