ஆஃப் சைடின் மன்னன்
கங்குலியை பொறுத்தவரை நட்புக்கு எப்போதும் முதலிடம் இருக்கும். இந்திய வீரர்கள் மட்டுமின்றி, வெளிநாடுகளில் அவருக்கு ரசிகர்கள் இருப்பது போன்று, வீரர்களும் அவருக்கு ரசிகர்களாக இருந்த காலம் உண்டு. இப்போதும் இருக்கிறார்கள். பின்ன இருக்காதா..? ஆஃப் சைடின் மன்னன் ஆச்சே நம்ம கங்குலி. அவரது ஆஃப் சைட் பவுண்டரிகள் எல்லாம் இன்று வரை புதுமுக வீரர்களுக்கு ரெஃபரன்ஸ் என்றால் அது மிகையாகாது.
கங்குலி அணியில் அக்தர்
அந்த வகையில், பாகிஸ்தானில் அதிக ரசிகர்களை கொண்ட இந்திய வீரர்களில் ஒருவர் சவுரவ் கங்குலி. அதேபோல், இன்சமாம், அப்ரிடி, அக்தர் என்று பலரும் கங்குலியோடு மிக நெருக்கமாக நட்பு பாராட்டியவர்கள்.கங்குலி தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில், சோயப் அக்தர் களமிறங்கியதை ரசிகர்கள் அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது. அதுவும், சச்சினின் விக்கெட்டை அக்தர் கைப்பற்ற, ஒட்டுமொத்த ஈடன் கார்டனும் அதிர, கங்குலி ஓடி வந்து அக்தரை கட்டித்தழுவியதெல்லாம் இனி ஒருபோதும் காணக்கிடைக்காத அரிய நிகழ்வு.
திருமணத்தில் கங்குலி
அப்படி கங்குலியின் ரசிகராக, நண்பராக இருந்தவர் முன்னாள் வீரர் யாசிர் அராஃபத். அவர் 'ஸ்போர்ட்ஸ் யாரி' எனும் யூடியூப் சேனலுக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில், இதுவரை யாருக்கும் தெரியாத விஷயம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதவாது, அவர் தனது திருமணத்துக்கு பல சர்வதேச வீரர்களை அழைத்தும், பெரிதாக எவரும் அவரவர்களின் பிஸி ஷெட்யூல்களால் கலந்து கொள்ளவில்லை. ஆனால், கங்குலி அவரது திருமணத்திற்கு தவறாமல் சென்றிருக்கிறார். கங்குலி என் அழைப்பை ஏற்று, அதுவும் அவருக்கு அப்போது இருந்த கடுமையான பிஸி ஷெட்யூலில், சில நிகழ்வுகளை கேன்சல் செய்து, ரிஸ்க் எடுத்து திருமணத்துக்கு வந்தது என் வாழ்வில் என்றும் மறக்க முடியாத சம்பவம் என்று பெருமை பொங்க பேசியிருக்கிறார்.
கொல்கத்தா அணியில் ஒப்பந்தம்
அதுமட்டுமின்றி, கொல்கத்தா அணியில் விளையாட தனக்கு ஷாருக் கான் அழைப்பு விடுத்ததையும் யாசிர் அராஃபத் மனம் திறந்து பேசியுள்ளார். இந்தியாவில் இருந்து எனக்கு வந்த அழைப்பை முதலில், யாரோ என்னை கிண்டல் செய்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டேன். பிறகு தான் ஷாருக் கான் என்னை அழைத்தது உண்மை என்று தெரிய வந்தது. மூன்று வருடங்களுக்கு என்னை அவர்கள் ஒப்பந்தம் செய்ததை இன்று வரை என்னால் நம்பமுடியவில்லை என்று கூறியுள்ளார்.
அதான்யா கங்குலி!.