நியூசிலாந்து vs ஆஸ்திரேலியா
இந்த உலகக் கோப்பை தொடரில் இதுவரை இரண்டு அணிகளும் கிட்டதட்ட ஒரே மாதிரியான ஆட்டத்தையே வெளிப்படுத்தியுள்ளன. சூப்பர் 12 சுற்றில் 5இல் 4 போட்டிகளில் வென்று, இரு அணிகளும் புள்ளிப்பட்டியலில் 2ஆம் இடத்தையே பிடித்தது. அரையிறுதி போட்டியிலும் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளில் யார் வெல்வார்கள் எனப் பலரும் ஆரூடம் தெரிவித்து வரும் நிலையில், பிசிசிஐ தலைவர் கங்குலி தனது கருத்து பகிர்ந்துள்ளார்.
நியூசிலாந்து அணி
இந்த உலகக் கோப்பை தொடரில் ஷார்ஜியாவில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது நியூசிலாந்து. இருப்பினும், அதன் பிறகு சூப்பரான கம்பேக் கொடுத்த நியூசிலாந்து தொடர்ச்சியாக 5 போட்டிகளில் வென்றுள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் நியூசிலாந்துக்குக் கடைசி 4 ஓவர்களில் 57 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது டேரில் மிட்செல் 47 பந்துகளில் 72 ரன்களையும், ஜேம்ஸ் நீஷம் 11 பந்துகளில் 27 ரன்களையும் எடுத்து, 19 ஓவர்களில் நியூசிலாந்து வெற்றியை உறுதி செய்தனர்,
பிசிசிஐ தலைவர் கங்குலி
சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நியூசிலாந்து அணி தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதாக பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். முன்னதாக இந்த ஆண்டு தொடக்கத்தில் தான் நியூசிலாந்து அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியின் துணிச்சல் பாராட்டத்தக்க வகையில் உள்ளதாகவும் கங்குலி குறிப்பிட்டார்.
ஆதரவு யாருக்கு
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "சர்வதேச அரங்கில் நியூசிலாந்து தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. ஆஸ்திரேலியா ஒரு சிறந்த அணி தான். இருப்பினும், அவர்கள் தற்போது கடினமான சூழ்நிலையில் உள்ளனர். நாம் டிவியில் பார்ப்பதைவிட நியூசிலாந்து அணிக்கு அதிக துணிச்சலும் போராடும் குணமும் உள்ளது. அவர்கள் சில மாதங்களுக்கு முன்பு தான் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்றனர். அவர்கள் சிறிய நாடு தான் என்றாலும் கூட திறமையான பல வீரர்களைக் கொண்டுள்ளனர். இது நியூசிலாந்திற்கு நேரம் என்பதே எனது கருத்து" என்று அவர் தெரிவித்தார்.
இந்தியா தோல்வி ஏன்
இந்த தொடரில் இந்தியா சூப்பர் 12 சுற்றுடன் வெளியேறியது குறித்து அவர் கூறுகையில், "இந்திய அணியின் மீது மிகப் பெரிய அளவுக்கு எதிர்பார்ப்பு இருந்து. இந்திய அணியில் உள்ள பும்ரா, ஷமி, ரோஹித் மற்றும் கோலி அனைவரும் மனிதர்கள் தான். இரண்டு போட்டிகளில் மட்டும் அவர்களால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் போனது. அதன் பிறகு சிறப்பான கம்பேக் கொடுத்தார்கள். விளையாட்டில் இது சகஜம். இதே அணி நிச்சயம் நமக்குக் கோப்பையை வென்று தரும். எனக்கு நம்பிக்கை உள்ளது. அதேபோல பெரும்பாலான இந்திய ரசிகர்கள் போட்டியின் முடிவை ஏற்றுக்கொண்டனர். இந்திய அணிக்கு பெரும் ஆதரவாகவே இருந்தனர்" என்றும் அவர் தெரிவித்தார்.