பிசிசிஐ தலைவர் ஆன கங்குலி
கடந்த செப்டம்பர் மாதம் கங்குலி பிசிசிஐ தலைவராக போட்டி இன்றி தேர்வு செய்யப்பட்டார். அதற்கு முன்பு பிசிசிஐ உச்ச நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் சில ஆண்டுகள் இருந்தது. அதனால், பிசிசிஐக்கு முன்னாள் வீரர் தலைவராக இருப்பதை அனைத்து நிர்வாகிகளும் ஏற்றுக் கொண்டு போட்டி இன்றி அவரை தேர்வு செய்தனர்.
பதவிக் காலம்
ஆனால், அப்போது கங்குலியின் பதவிக் காலத்தில் ஒரு சிக்கல் இருந்தது. கங்குலி ஏற்கனவே இரண்டு முறை பெங்கால் கிரிக்கெட் அமைப்பின் தலைவர் பதவியில் இருந்ததால் அவர் 10 மாதங்கள் மட்டுமே பிசிசிஐ தலைவர் பதவியில் இருக்க முடியும் என்ற நிலை இருந்தது.
உச்சநீதிமன்ற வழக்கு
அதை மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கக் கோரி கங்குலி உச்ச நீதிமன்றத்தில் கோரி உள்ளார். அந்த வழக்கு இன்னும் விசாரணைக்கு வரவில்லை. இந்த நிலையில், தான் அவருக்கு மேலும் ஒரு சிக்கல் எழுந்துள்ளது. அதற்கு காரணம், ஐசிசி உறுப்பினர் பதவி.
ஐசிசி உறுப்பினர் யார்?
கடந்த சில மாதங்களாக பிசிசிஐ சார்பாக ஐசிசியில் உறுப்பினர் யாரும் நியமிக்கப்படாமல் இருந்தது. அந்த இடத்திற்கு யாரை நியமிப்பது என்பதில் குழப்பம் இருந்தது. அதனால், ஐசிசி கூட்டங்களில் பிசிசிஐ சார்பாக பேச ஆள் இல்லாத நிலை நீடித்தது.
மார்ச் 28 கூட்டம்
இந்த நிலையில், மார்ச் 28 அன்று நடந்த ஐசிசி கூட்டத்தில் பிசிசிஐ தலைவர் கங்குலி பங்கேற்றார். அதே கூட்டத்தில் அவரை ஐசிசி உறுப்பினராகவும் நியமித்தது ஐசிசி. அது தான் இப்போது பிசிசிஐ தலைவர் பதவிக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
சஞ்சீவ் குப்தா எதிர்ப்பு
மத்திய பிரதேச கிரிக்கெட் அமைப்பின் வாழ்நாள் உறுப்பினரும், முன்னாள் பிசிசிஐ நிர்வாகியுமான சஞ்சீவ் குப்தா கங்குலி பிசிசிஐ தலைவர் பதவியில் நீடிக்க முடியாது என எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஐசிசி உறுப்பினராக கங்குலி நியமிக்கப்பட்ட போதே அவரது பிசிசிஐ தலைவர் பதவி காலியாகி விட்டது என அவர் கூறி உள்ளார்.
என்ன சொன்னார்?
ஐசிசி உறுப்பினர் பதவிக்கு முன் மொழிந்த போதே பிசிசிஐ தலைவர் பதவி காலி ஆகி விட்டது என குறிப்பிட்டு சஞ்சீவ் குப்தா கடிதம் எழுதி உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து அவர் ஊடகங்களிடமும் பேசி உள்ளார். அதனால், பிசிசிஐ வட்டாரத்தில் சலசலப்பு எழுந்துள்ளது.
சிக்கலில் கங்குலி
ஏற்கனவே, கொரோனா வைரஸ் காரணமாக தடைபட்டுள்ள ஐபிஎல், பதவி காலத்தை நீட்டிப்பது என பல சிக்கல்களில் இருக்கும் கங்குலிக்கு இது மேலும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. இதில் அவருக்கு மற்றொரு ஆதாயமும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
ஐசிசி தலைவர் பதவி
அதே சமயம், ஐசிசியில் விரைவில் தலைவர் பதவி காலியாக உள்ளது. அதற்கு கங்குலியை நியமிக்க வேண்டும் என சில நாடுகள் இப்போதே குரல் எழுப்பி இருப்பதும் குறிப்பிடத்தக்கது. பிசிசிஐ தலைவர் பதவி போனாலும் ஐசிசியை பிடிக்க கங்குலி காய் நகர்த்தி வருகிறாரா?