பகல் - இரவு டெஸ்ட்
ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கைக்கு கங்குலி அளித்த பேட்டியில் பகல் - இரவு டெஸ்ட் போட்டிகள் பற்றிய கேள்விக்கு கங்குலி, "இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு பகல் - இரவு டெஸ்ட் போட்டி நடத்த முயல்வோம். அதே போல, இந்தியா வெளிநாடுகளுக்கு சென்றால் அங்கே ஒரு பகல் - இரவு போட்டியில் ஆடுவது குறித்து கேட்போம்" என்றார்.
கேப்டன் பற்றிய கேள்வி
ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிக்கு தனி கேப்டன் வேண்டும். ரோஹித் சர்மாவை குறைந்த ஓவர்கள் போட்டிக்கு கேப்டனாக நியமிக்க வேண்டும் என்ற குரல்கள் இருப்பது பற்றிய கேள்விக்கு பதில் அளித்தார் கங்குலி.
ரோஹித் பற்றி..
"ரோஹித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியை ஐபிஎல் தொடரில் வழிநடத்திய அனுபவம் மற்றும் கோலி இல்லாத போது இந்திய அணியை வெற்றிகரமாக வழிநடத்திய அனுபவம் இருப்பதால் ரோஹித் சர்மா குறைந்த ஓவர் போட்டிகளுக்கு கேப்டனாக இருக்கலாம் என கூறுகிறார்கள்"
அவசியம் இல்லை
"ஆனால், அதைப் பற்றி விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை என நான் நினைக்கிறேன்" என்று திட்டவட்டமாக கூறினார் கங்குலி. இதன் மூலம், கேப்டன் பதவியில் இப்போதைக்கு எந்த மாற்றமும் ஏற்பட வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது.
சிறந்த செயல்பாடு
தன் பிசிசிஐ தலைவர் பதவி செயல்பாடுகள் பற்றி பேசிய அவர், "எனக்கு என் மீது அபார நம்பிக்கை உள்ளது. என்னிடம் ஒரு விஷயத்தை கொடுத்து, அதை முற்றிலுமாக மாற்ற வேண்டும் என்றால் என்னால் அதை செய்ய முடியும் என நினைக்கிறேன்' என்றார்.
சவால்கள்
மேலும், "உடை மாற்றும் அறையில் அமர்வதால் மட்டுமே ஒருவர் சிறந்த கிரிக்கெட் வீரர் ஆக முடியாது. கடினமான சவால்களை ஏற்றுக் கொண்டால் தான் நீங்கள் மதிக்கப்படுவீர்கள். என்னிடம் பொறுப்பை கொடுத்தால், என் சிறப்பான செயல்பாட்டை அளிப்பேன். என்னை தனியாக விட்டு விட்டால் தூங்கி விடுவேன்" என்றார்.
கோலி கடினம் இல்லை
கேப்டன் விராட் கோலியை சமாளிப்பது கடினம் என்ற பிம்பம் குறித்து பேசிய கங்குலி, "அது கடினமே இல்லை. அணித் தேர்வில் நான் தலையிட மாட்டேன்" என்றார்.
தேர்வுக் குழு மாற்றம்
தேசிய அணியின் தேர்வுக் குழுவில் விரைவில் மாற்றம் இருக்கும் என்பதை குறிக்கும் வகையில் தேர்வுக் குழு குறித்த கேள்விக்கு, "நாங்கள் அனுபவமும், திறனும் வாய்ந்தவர்களை பார்த்துக் கொண்டு இருக்கிறோம்" என பதில் அளித்தார் கங்குலி.
டெஸ்ட் போட்டிகள் நிலை
டெஸ்ட் போட்டிகள் முன்பு போல விறுவிறுப்பாக இருப்பதில்லை. ரசிகர்களும் பெரும் அளவில் டெஸ்ட் போட்டிகளை காண வருவதில்லை. இது குறித்து கேட்ட போது, கங்குலி தற்போது உள்ள சில அணிகள் சிறப்பாக ஆடுவதில்லை என்றார்.
முன்பு போல இல்லை
தென்னாப்பிரிக்கா அணி முன்பு போல ஆடுவதில்லை. சமீபத்தில் நடந்த டெஸ்ட் தொடரில் கூட அந்த அணி மோசமான செயல்பாட்டை அளித்தது. பாகிஸ்தான், இலங்கை அணிகளும் முன்பு போல ஆக்ரோஷமான கிரிக்கெட் ஆடுவதில்லை என்றார் கங்குலி.