போராட்ட குணம்
கங்குலி போராட்ட குணம் கொண்டவர் என்பது அனைவருக்கும் தெரியும். அவரது கிரிக்கெட் பயணமும் அதை ஒட்டியே அமைந்தது. அதுவும் சர்வதேச கிரிக்கெட் பயணத்தை துவக்கியவுடன் இந்திய அணியில் கட்டம் கட்டப்பட்டு அதிரடியாக நீக்கப்பட்டார்.
முதல் தொடர்
1992இல் ஆஸ்திரேலியாவில் பென்சன் அண்டு ஹெட்ஜஸ் உலக கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. அந்த தொடருக்கான இந்திய அணியில் சவுரவ் கங்குலி தேர்வு செய்யப்பட்டார். அவர் இளம் வீரர் என்பதால் களமிறங்க அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை.
நீக்கம்
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரே ஒரு போட்டியில் மட்டுமே ஆடினார். அதிலும் 13 பந்துகளை சந்தித்து 3 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார். அந்த தொடருக்கு பின் அவரை இந்திய அணியில் இருந்தும் நீக்கி விட்டனர்.
என்ன காரணம்?
அதற்கு காரணம் அவர் சரியாக ரன் குவிக்காதது தான் என சிலர் நினைக்கின்றனர். ஆனால், உண்மையான காரணம் வேறு. கங்குலி அந்த தொடரில் சக வீரர்களுக்கு இடைவேளையில் தண்ணீர் எடுத்துச் செல்ல மறுத்துள்ளார். அது என் வேலை இல்லை என கூறி உள்ளார்.
கடும் அதிருப்தி
கங்குலியின் இந்த நடவடிக்கை மூத்த வீரர்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. அப்போது இந்திய அணியின் கேப்டனாக முகமது அசாருதீன் இருந்தார். கபில் தேவ், ஸ்ரீகாந்த், கிரண் மோரே உள்ளிட்ட மூத்த வீரர்கள் அணியில் இடம் பெற்று இருந்தனர்.
ரன் மழை பொழிந்தார்
அப்போது அணியை விட்டு கங்குலியை நீக்கிய பின் மீண்டும் அவரை இந்திய அணியில் தேர்வு செய்யக் கூடாது என்றே முடிவு செய்து விட்டதாக கூறப்படுகிறது. ஆனாலும், கங்குலி போராடத் துவங்கினார் 1994 முதல் 1996 வரை உள்ளூர் போட்டிகளில் ரன் மழை பொழிந்தார்.
ஆதரவு அதிகரித்தது
ஒரு கட்டத்தில் அவரை இந்திய அணியில் தேர்வு செய்ய வேண்டும் என ஊடகங்களே எழுதத் துவங்கின. அவருக்கு ஆதரவு அதிகரித்தது. அப்போது இந்திய அணி வேறு வழியின்றி அவரை தேர்வு செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.
மறுப்பு
அதன் பின் கங்குலி உச்சம் தொட்டார். கேப்டனாக உயர்ந்தார். தற்போது பிசிசிஐ தலைவராகவும் ஆகி உள்ளார். 1992இல் நடந்ததாக சொல்லப்படும் நிகழ்வுகளை கங்குலி ஒரு பேட்டியில் மறுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
போராட்டம்
1992இல் இளம் வயதில் கங்குலி செய்தது தவறாகவே இருக்கலாம். ஆனால், அதை தாண்டி தன்னை மீண்டும் அணியில் தேர்வு செய்ய வைக்கும் வரை அவர் போராடியது தான் பின்னாட்களில் அவர் கேப்டனாக உயர முக்கிய காரணம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.