கேப்டன் கங்குலி
கங்குலி 2000 முதல் 2005 வரை இந்திய அணியின் சிறந்த கேப்டனாக இருந்தார். கிரெக் சேப்பல் அணியின் பயிற்சியாளர் ஆன பின் கங்குலியை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது இந்திய அணி நிர்வாகம். அதன் பின் அணியில் இருந்தும் சிறிது காலம் நீக்கப்பட்டார்.
அணியில் நீக்கம்
2006இல் தன் உச்சகட்ட பார்மில் மீண்டும் அணிக்கு திரும்பினார். 2007-08இல் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக ரன் குவித்து வந்தார். எனினும், அவரை அணியில் இருந்து நீக்கினார் கேப்டன் தோனி. அவரால் முன்பு போல பீல்டிங் செய்ய முடியவில்லை என காரணம் கூறப்பட்டது.
வாய்ப்பு மறுப்பு
அதன் பின் ஒருநாள் அணியில் கங்குலிக்கு இடம் கிடைக்கவில்லை. அடுத்த சில மாதங்களில் கங்குலி டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றார். தான் அப்போது நன்கு ஆடக் கூடிய நிலையில் இருந்தாலும் அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டதாக தற்போது கூறி உள்ளார் கங்குலி.
வாய்ப்பு அளித்து இருந்தால்..
"எனக்கு இன்னும் இரண்டு ஒருநாள் தொடர்கள் கொடுத்து இருந்தால் தான் இன்னும் நிறைய ரன் குவித்து இருப்பேன். நான் நாக்பூர் டெஸ்டில் ஓய்வு பெற்று இருக்காவிட்டால் இன்னும் இரண்டு டெஸ்ட் தொடர்களில் கூட ரன் குவித்து இருப்பேன்." என்றார் கங்குலி.
இப்போதும் ரன் குவிப்பேன்
"இப்போது கூட எனக்கு ஆறு மாத பயிற்சி மற்றும் மூன்று ரஞ்சி போட்டிகள் தாருங்கள். நான் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் ரன் குவிப்பேன். எனக்கு ஆறு மாதம் கூட வேண்டாம். மூன்று மாதம் தாருங்கள். நான் ரன் குவிப்பேன்" என்றார் பிசிசிஐ தலைவர் கங்குலி.
நம்பிக்கை
"நீங்கள் எனக்கு விளையாட வாய்ப்பு தராமல் போகலாம். ஆனால், எனக்கு உள்ளே இருக்கும் நம்பிக்கையை எப்படி உடைப்பீர்கள்?" என கேள்வி எழுப்பினார் கங்குலி. அடுத்து ஒருநாள் போட்டியில் தன்னை நீக்கியது பற்றி பேசினார்.
என்ன நடந்தது?
"அது நம்ப முடியாதது. அந்த ஆண்டு அதிக ரன் குவித்த வீரர்களில் ஒருவராக இருந்த போது ஒருநாள் அணியில் இருந்து நீக்கப்பட்டேன். நீங்கள் எத்தனை சிறப்பாக ஆடினாலும், மேடை இல்லாமல் எதை நிரூபிக்க முடியும்? யாருக்கு நிரூபிக்க முடியும்? அதுதான் எனக்கு நடந்தது." என்றார் கங்குலி.
ஓய்வு
2008இல் ஒருநாள் போட்டிகள் மற்றும் டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்ற கங்குலி பின்னர் 2012 வரை ஐபிஎல் தொடரில் ஆடி வந்தார். 113 டெஸ்ட் போட்டிகளில் 7212 ரன்களும், 311 ஒருநாள் போட்டிகளில் 11363 ரன்களும் குவித்துள்ளார் கங்குலி.