கொரோனா வைரஸ் பாதிப்பு
கொரோனா வைரஸ் பாதிப்பு உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. மக்கள் இந்த வைரஸ் பாதிப்பு இருக்கும் நிலையிலும் இயல்பு வாழ்க்கையை தொடர வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அதனால், லாக்டவுன் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வருகிறது.
மேற்கு வங்காளத்தில் கொரோனா
மேற்கு வங்காளத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. கொல்கத்தாவில் தான் சௌரவ் கங்குலியின் பூர்வீக இல்லம் இருக்கிறது. அங்கே தான் அவர் வசித்து வருகிறார். சௌரவ் கங்குலியின் அண்ணன் சிநேகஷிஷ் கங்குலியும் கொல்கத்தாவில் தான் வசித்து வருகிறார்.
பரிசோதனை செய்யப்பட்டது
சிநேகஷிஷ் கங்குலி பெங்கால் கிரிக்கெட் அமைப்பின் தலைவராக இருக்கிறார். அவர் முன்னாள் ரஞ்சி ட்ராபி கிரிக்கெட் வீரர் ஆவார். அவரது மனைவியின் பெற்றோருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருந்ததால் பரிசோதனை செய்யப்பட்டது.
தொற்று உறுதி
அதில் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி ஆனது. அதைத் தொடர்ந்து சிநேகஷிஷ் கங்குலி மற்றும் அவரது மனைவிக்கும் அறிகுறிகள் தென்பட்டுள்ளன. அவர்களில் சிநேகஷிஷ் கங்குலிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என தெரிய வந்துள்ளது.
நால்வரும் அனுமதி
அவரது மனைவிக்கு பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. அவர்கள் வீட்டின் பணிப் பெண்ணுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிநேகஷிஷ் கங்குலி வீட்டிலேயே தனிமையில் வைக்கப்பட்டுள்ளார். மற்ற நால்வரும் தனியார் நர்ஸிங் ஹோமில் அனுமதிக்கப்பட்ட்டுள்ளனர்.
மறு பரிசோதனை செய்யப்படும்
அவர்களுக்கு முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், நால்வருக்கும் மீண்டும் சனிக்கிழமை அன்று மறு பரிசோதனை செய்யப்படும் எனவும் சுகாதார அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. அதன் பின்னரே அவர்களுக்கு என்ன சிகிச்சை அளிக்கலாம் என முடிவு செய்ய முடியும் எனவும் கூறி உள்ளனர்.
ரசிகர்கள் கவலை
அப்போது அவர்களுக்கு பாதிப்பு இல்லை எனத் தெரிந்தால் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் எனவும் அதிகாரி கூறினார். சௌரவ் கங்குலி ரசிகர்கள் அவருக்கு தொற்று ஏற்பட்டு இருக்குமோ என்ற கவலையில் உள்ளனர். முன்னதாக சௌரவ் கங்குலி கொரோனாவால் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு உதவி செய்தது குறிப்பிடத்தக்கது.