3 இடங்களில் அடைப்பு
கங்குலிக்கு கடந்த ஜனவரி 2ஆம் தேதி முதல் முறையாக மாரடைப்பு ஏற்பட்டது. அப்போது அவருக்கு இதயத்தில் மூன்று இடங்களில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அதில் ஒரு அடைப்பு மட்டுமே அப்போது சரி செய்யப்பட்டது. மற்ற அடைப்புகளை விரைவில் நீக்க சிகிச்சை அளிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது.
மருத்துவமனைக்கு விரைந்தார்
இந்த நிலையில், கங்குலிக்கு நேற்று இரவு இதயத்தில் லேசான வலி இருந்துள்ளது. மதியமும் வலி நீடித்த நிலையில் அவர் கொல்கத்தாவில் உள்ள அப்போல்லோ மருத்துவமனைக்கு விரைந்தார். அவர் தன் காரிலேயே மருத்துவமனை சென்றார்.
இதயத்தில் அடைப்பு
அவருக்காக மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் அவசர சிகிச்சை பிரிவின் வாயிலில் காத்திருந்தனர். மருத்துவமனை சென்ற கங்குலி ஸ்ட்ரெச்சர் அல்லது வீல்சேரில் ஐசியூ வார்டுக்கு செல்ல மறுத்து, நடந்தே சென்றார். அவரை சோதித்த மருத்துவர்கள் அவருக்கு இதயத்தில் அடைப்பு இருந்தாலும் அவர் உடல்நிலை சீராக இருப்பதை உறுதி செய்தனர்.
ஆஞ்சியோபிளாஸ்டி
விரைவில் கங்குலிக்கு இதயத்தில் உள்ள அடைப்புக்களை நீக்க ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட உள்ளது. ரசிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டி பிரார்த்தனை செய்து வருகின்றனர்.