ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை
கடந்த சனிக்கிழமை மாரடைப்பு காரணமாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி கொல்கத்தாவில் உள்ள வுட்லாண்ட்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவருக்கு உடனடியாக ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவருக்கு இதயக்குழாய்களின் 3 இடங்களில் அடைப்பு உள்ளது கண்டறியப்பட்டுளளது.
சிகிச்சை ஒத்திவைப்பு
இதையடுத்து அவரது ரிக்கார்டுகளை சோதனை செய்த 9 மருத்துவ நிபுணர்கள் ஆன்லைன் மூலம் அவரது நிலை குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். அவருக்கு மற்றொரு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ள வேண்டியுள்ளதாகவும் ஆனால் அவருக்கு வலி இல்லாத காரணத்தால் அந்த சிகிச்சை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
9 நிபுணர்கள் ஆலோசனை
ஆன்லைன் மூலம் செய்யப்பட்ட இந்த ஆலோசனையில் இதய சிகிச்சை நிபுணர்கள் டாக்டர் தேவி ஷெட்டி மற்றும் ஆர்கே பாண்டா ஆகியோர் பங்கேற்றனர். மேலும் அமெரிக்காவில் இருந்து மற்றொரு இதய சிகிச்சை நிபுணரும் பங்கேற்று கங்குலியின் உடல்நிலை குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
வுட்லாண்ட்ஸ் சிஇஓ அறிவிப்பு
இந்த ஆலோசனையின்போது கங்குலியின் குடும்ப உறுப்பினர்களும் உடனிருந்தனர். அவர்களுக்கு அவரது உடல்நிலை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. இதையடுத்து வரும் புதன்கிழமை தாதா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாகவும் வுட்லாண்ட்ஸ் மருத்துவமனையின் சிஇஓ ரூபாலி பாசு தெரிவித்துள்ளார்.
தாதா ஒரு ஹீரோ என புகழ்ச்சி
இதனிடையே, கங்குலியை நேரில் கண்டு நலம் விசாரித்த மத்திய நிதித்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், அவர் கூடிய விரைவில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவார் என்று கூறியுள்ளார். தாதா ஒரு ஹீரோ என்றும் விளையாட்டில் தன்னுடைய எதிரிகளை பலமுறை வெற்றி கொண்டுள்ளதாகவும் அதேபோல தற்போதும் தன்னுடைய பிரச்சினையை எதிர்கொண்டு வெளிவருவார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.