தற்போதைய தேர்வுக் குழு
தற்போதைய இந்திய அணி தேர்வுக் குழு எம்எஸ்கே பிரசாத் தலைமையில் இயங்கி வருகிறது. இந்த குழுவில் ஐந்து தலைவரையும் சேர்த்து ஐந்து உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர்.
சர்ச்சைகள்
சர்வதேச கிரிக்கெட் அனுபவம் மிகவும் குறைவாக உள்ள இந்த குழுவினர், கடந்த காலத்தில் அணித் தேர்வில் தொடர்ந்து சர்ச்சைகளை சந்தித்து வந்தனர். முன்னாள் வீரர்கள் பலர் இவர்களது முடிவுகளை கடுமையாக விமர்சித்தனர்.
புதிய தேர்வுக் குழு
கங்குலி பிசிசிஐ தலைவராக வந்த நிலையில், தேர்வுக் குழுவை மாற்றி அமைக்க திட்டமிட்டுள்ளார். திறன் வாய்ந்த, அனுபவம் கொண்ட முன்னாள் வீரர்களை தேர்வுக் குழுவில் நியமிக்க காய் நகர்த்தி வருகிறார் கங்குலி.
ஐந்து ஆண்டுகள் நீட்டிப்பு
கடந்த ஆண்டு மாற்றி அமைக்கப்பட்ட பிசிசிஐ விதியின் படி தேர்வுக் குழுவின் பதவிக் காலம் நான்கு ஆண்டுகளில் இருந்து ஐந்து ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. தற்போதைய குழுவினர் நான்கு ஆண்டுகளுக்கு மட்டுமே நியமிக்கப்பட்டு இருந்தாலும், அவர்களுக்கு புதிய விதிப்படி பதவி நீட்டிப்பு கிடைக்குமா?என்ற கேள்வி இருந்தது.
பதவிக் காலம் நிறைவு
எம்எஸ்கே பிரசாத் மற்றும் ஒரு உறுப்பினர் நான்கு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளனர். அவர்களுக்கு பதவி நீட்டிப்பு இல்லை என கங்குலி அறிவித்து இருக்கிறார். அதன்படி, கங்குலி தேர்வுக் குழுவினர் விஷயத்தில் பழைய விதியை பின்பற்ற முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டது.
நான்கு ஆண்டுகள் மட்டுமே
இரண்டு உறுப்பினர்களுக்கு நான்கு ஆண்டுகள் மட்டுமே பதவி எனக் கூறி, பதவி நீட்டிப்பு வழங்காத நிலையில், மீதமுள்ள மூன்று உறுப்பினர்கள் நான்கு ஆண்டுகளை நிறைவு செய்ய இன்னும் ஓராண்டு உள்ளது. அவர்கள் மூன்று ஆண்டுகளை நிறைவு செய்துள்ளனர்.
மூன்று ஆண்டுகளாக குறைக்க முடிவு
இந்த நிலையில், கங்குலி தேர்வுக் குழுவினரின் பதவிக் காலத்தை மூன்று ஆண்டுகளாக குறைக்கப் போவதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. உலகக்கோப்பை நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வருவதால், அதன் அடிப்படையில் தேர்வுக் குழுவுக்கு நான்கு ஆண்டுகள் பதவி அளித்துள்ளனர்.
மீதமுள்ளவர்களை அனுப்ப திட்டமா?
ஆனால், தேர்வுக் குழுவுக்கு மூன்று ஆண்டுகளே போதுமானது என முடிவு செய்துள்ளார் கங்குலி. மீதமுள்ள மூன்று பேரையும் பதவியை விட்டு நீக்கவே கங்குலி இந்த முடிவை எடுத்து இருக்கலாம் என ஒரு தரப்பில் கூறப்படுகிறது.
அடுத்த தலைவர் யார்?
தேர்வுக் குழு தலைவர் பதவி முடிந்துள்ள நிலையில், அடுத்த தலைவராக தமிழகத்தை சேர்ந்த முன்னாள் இந்திய வீரர் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக ஒரு தகவல் வலம் வருகிறது.