பீதியான நொடிகள்
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஜூன் 18ம் தேதி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி தொடங்கவுள்ள நிலையில், அதைத் தொடர்ந்து இங்கிலாந்து அணியுடன் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. இரண்டுமே தலை சுற்றவைக்க தொடர்கள். சவால்கள் கொஞ்சநஞ்சமல்ல. மூச்சு முட்ட வைக்கும் நிமிடங்களும், பீதியான நொடியையும் தரும் தொடர் இது.
பலமான பவுலிங்
அப்படிப்பட்ட சவால் நிறைந்த இங்கிலாந்து தொடரில், கடந்த 7 வருடங்களில் இந்திய அணி வென்றுள்ள மொத்த டெஸ்ட் போட்டிகளின் எண்ணிக்கை 2 மட்டுமே. அவ்வளவு அடி வாங்கியிருக்கிறது இந்தியா. தோனி தலைமையில் சரி, கோலி தலைமையிலும் சரி. வாங்கிய அடி ஒன்றுதான். இம்முறை மீண்டும் கோலி தலைமையில் களமிறங்கியிருக்கிறது. இம்முறை நம்பிக்கையும் கூடுதலாக உள்ளது. பலமான பவுலிங் யூனிட், வலுவான பேட்டிங் யூனிட் என்று டஃப் கொடுக்கும் அணியே இங்கிலாந்து சென்றிருக்கிறது.
சச்சின் சதம்
இந்த சூழலில், இங்கிலாந்தில் ஒரு அருமையான ரீவைண்ட் போகலாம். வருடம் 1996. இதே போன்றதொரு ஜூன் மாதம். இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்தது முகமது அசாருதீன் தலைமையிலான இந்திய அணி. பிர்மிங்கமில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மெகா வெற்றிப் பெற்றது. சச்சின் அப்போட்டியின் இரண்டாம் இன்னிங்ஸில் சதம் (122) அடித்திருந்தும், மற்ற வீரர்களின் சொதப்பலால் தோல்வி அடைந்தது இந்தியா.
இரண்டு புதுமுகம்
இதனால், லார்ட்ஸில் நடைபெறவிருந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரண்டு முக்கிய மாற்றங்களை செய்தார் கேப்டன் அசாருதீன். இப்போது டிவியில் வர்ணனை செய்து கொண்டிருக்கிறாரே சஞ்சய் மஞ்சரேக்கர்.. அவரை அப்படியே உட்கார வைத்து, சவுரவ் கங்குலி மற்றும் ராகுல் டிராவிட் எனும் இளம் வீரர்கள் டெஸ்ட் போட்டியில் அறிமுகம் செய்யப்பட்டனர்.
நாசர் ஹுசைன்
லார்ட்ஸில் இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 344 ரன்கள் சேர்த்தது. அதில் அறிமுக வீரர் கங்குலிக்கும் கேப்டன் அசாருதீன் பந்து வீச வாய்ப்பு கொடுக்க, அதில் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதில், முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து ஆட்ட நாயகன் விருது பெற்ற நாசர் ஹுசைன் விக்கெட்டுக்கும் அடக்கம்.
லோ ஆர்டர் டிராவிட்
இப்போது இந்தியா பேட்டிங். அறிமுக வீரர் கங்குலி ஒன் டவுன் இறங்குகிறார். ஆனால், மறுபுறம் சச்சின் உள்ளிட்ட அனைவரது விக்கெட்டுகளும் அடுத்தடுத்து சரிய, லோ ஆர்டரில் களமிறங்கினார் மற்றொரு அறிமுக வீரர் ராகுல் டிராவிட். இங்கிலாந்தின் அபார பந்துவீச்சை திறம்பட இருவரும் சமாளித்து ஆடியது சீனியர் வீரர்களான, நயன் மோங்கியா, விக்ரம் ரத்தோர், அஜய் ஜடேஜா ஆகியோரை வியக்க வைத்தது.
டிராவிட் 95
இறுதியில் சதம் விளாசிய கங்குலி, 301 பந்துகளை சந்தித்து 20 பவுண்டரிகளுடன் 131 ரன்கள் குவித்தார். மறுபக்கம் 267 பந்துகளை சந்தித்து மெகா கட்டை போட்ட ராகுல் டிராவிட் 95 ரன்கள் அடித்து, ஜஸ்ட் 5 ரன்களில் சதத்தை நழுவ விட்டார். டிராவிட் போட்ட கட்டையில் நாக்குத்தள்ளி போனது இங்கிலாந்து. இதனால் 429 ரன்கள் குவித்தது. முதல் போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணி, இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் லீடிங் சென்றது.
சாதித்த இளம் சிங்கங்கள்
பிறகு இரண்டாவது இன்னிங்ஸிலும், மூன்றே ஓவர் வீசிய கங்குலி, ஜேக் ரசல் விக்கெட்டை கைப்பற்றி இருந்தார். இவர் முதல் இன்னிங்ஸில் சதம் அடித்திருந்தவர். எனினும், இப்போட்டி டிராவானது. இப்படி, அறிமுகமான முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்து, 3 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றிய கங்குலியும், விக்கெட் விழாமல் தடுத்து ஆடி 95 ரன்கள் எடுத்த டிராவிட்டும் பிற்காலத்தில் இந்திய அணியின் சிறந்த கேப்டன்களாக உருவானது காலத்தின் பரிசு. 80'ஸ் கிட்ஸ் எப்போதும் மறக்க முடியாத கிரிக்கெட் போட்டி இது என்றால் அது மிகையாகாது.