அறிமுகம் எப்போது?
யுவராஜ் சிங், கங்குலியின் கேப்டன்சியில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகம் ஆனார். முதல் போட்டியிலேயே ஆட்ட நாயகன் விருது வாங்கி அசத்தினார். தொடர்ந்து கலக்கி வந்த யுவராஜ் சிங், சில வருடங்களிலேயே ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.
மறக்க முடியுமா?
டி20 உலகக்கோப்பையில் ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்கள், 2011 உலகக்கோப்பை தொடரின் தொடர் நாயகன் விருது என அவர் அடுத்து செய்த விஷயங்கள் அவரை எத்தனை ஆண்டுகள் ஆனாலும், ரசிகர்களால் மறக்க முடியாத உயரத்துக்கு அவரை எடுத்துச் சென்றது.
ஓய்வு முடிவு
எனினும், கடந்த சில ஆண்டுகளாக யுவராஜ் சிங் பார்ம் இன்றி தவித்து வந்தார். வயதும் அதற்கு ஒரு காரணம். இந்த நிலையில், தன் ஓய்வு முடிவை நேற்று அறிவித்தார். அப்போது, பிசிசிஐ தனக்கு ஓய்வுக்கு முன் ஒரு போட்டியில் ஆட வாய்ப்பு அளிப்பதாக கூறி இருந்தார்.
மரியாதை இல்லை
ஆனால், தனக்கு அப்படி எந்த வாய்ப்பும் அளிக்கப்படவில்லை என்பதை மேலோட்டமாக கூறினார். அதை பிடித்துக் கொண்ட ரசிகர்கள், யுவராஜ் சிங்கிற்கு சரியான மரியாதை வழங்கப்படவில்லை. அவருக்கு ஒரு போட்டியில் ஆடும் வாய்ப்பை அளித்து, அப்போது ஓய்வு கொடுத்திருக்க வேண்டும் என கூறினர்.
தேவை இல்லை
இது பற்றி முன்னாள் கேப்டன் கங்குலியிடம் கேட்ட போது, "அது தேவை இல்லை என்று நினைக்கிறேன். எனக்கு இந்த ஓய்வு பெறுவதற்கான போட்டிகளில் எல்லாம் நம்பிக்கை இல்லை. அது நீங்கள் ஒரு வீரராக தொடரும் நிலையில்.. அணியில் நீங்கள் ஆடுகிறீர்கள் எனும் பட்சத்தில்.. அது சரி" என்று கூறி ஓய்வு போட்டிகள் எல்லாம் தேவையில்லை என கூறினார்.
கங்குலி பெருமை
"ஒரு வீரராக அவர் என்ன அடைந்தாரோ, அது எதுவும் அவர் ஓய்வு பெறுவதற்கான போட்டியை பெறவில்லை என்றால் மாறி விடாது" என தான் அறிமுகம் செய்த யுவராஜ் சிங் குறித்து பெருமையாக கூறினார் கங்குலி.