அதிரடி ஆட்டக்காரர்
ஐபிஎல் தொடரில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருபவர் சூர்யகுமார் யாதவ். இந்த சீசனிலும் மும்பை அணிக்காக அவர் சிறப்பான போட்டிகளை தந்துள்ளார். கடந்த ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியிலும் 79 ரன்களை குவித்து அணியின் மெகா வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளார்.
இடம்பெறாத சூர்யகுமார்
இந்நிலையில், அடுத்த மாதம் 27ம் தேதி முதல் துவங்கி நடைபெறவுள்ள ஆஸ்திரேலிய தொடர்களுக்காக அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரின் பெயர்கள் இடம்பெறவில்லை.
திலிப் வெங்சர்க்கார் கேள்வி
இந்நிலையில் ரோகித் காயம் காரணமாக விலக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், சூர்யகுமார் எந்த காரணத்திற்காக நீக்கப்பட்டுள்ளார் என்று முன்னாள் இந்திய தலைமை தேர்வாளர் திலிப் வெங்சர்க்கார் கேள்வி எழுப்பியுள்ளார். இந்திய அணியில் இடம்பெற நல்ல ஆட்டம் மற்றும் பிட்னஸ் மட்டும் போதுமா அல்லது வேறு ஏதாவது தேவையா என்றும் யாராவது இதை விளக்குங்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வெங்சர்க்கார் அறிவுறுத்தல்
மேலும் இந்த விவகாரத்தில் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தலையிட்டு தேர்வாளர்களிடம் கேள்வி எழுப்ப வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். தற்போதைய சூழ்நிலையில் நாட்டின் மிகவும் திறமையான பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் என்றும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார். ரோகித் அணியில் இல்லாத நிலையில் மிடில் ஆர்டரில் விளையாட சூர்யகுமார் கண்டிப்பாக தேவை என்றும் அவர் கூறியுள்ளார்.