ஒய்வு பெற்ற கங்குலி
இந்திய அணியின் 'தாதா' முன்னாள் கேப்டன் கங்குலி 2005 செப்டம்பர் மாதம் திடீர் என்று ஒருநாள் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார். அப்போது அவர் இந்திய அணியின் கேப்டனாக இருந்தார். அவருக்கு பதில் ராகுல் டிராவிட் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அதன்பின் இரண்டு வருடம் கழித்து 2007 ஜனவரியில் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டார். மிகவும் சிறப்பாக விளையாடி வந்த போதே இந்த அணியில் இருந்து 2008ல் ஓய்வு பெற்றார்.
மனிதன் ஆனேன்
இந்தநிலையில் தன்னுடைய கேபிடென்சி பறிபோனது குறித்து கங்குலி பேசி இருக்கிறார். அதில் ''இந்திய அணியின் கேப்டனாக இருந்த போது மொத்த உலகமே என் காலடியில் இருந்தது. ஆனால் ஒருநாள் திடீர் என்று நான் அணியில் இருந்து நீக்கப்பட்டேன். எந்த கேப்டனுக்கும் அப்படி ஒரு சூழ்நிலை வந்தது இல்லை. ஆனால் அந்த நிகழ்வுதான் என்னை முழு மனிதனாக மாற்றியது'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
மிக முக்கியமான அறிவுரை
அதேபோல் அவர் இப்போதுவரை தன்னுடைய வாழ்க்கையை வழி நடத்தி வரும் முக்கியமான அறிவுரை ஒன்றை குறித்தும் பேசியுள்ளார். அதில் ''என்னுடைய நண்பர் பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் இம்ரான் கான் ஒருமுறை என்னிடம் ஒரு அறிவுரை கூறினார். நீ வானத்தில் பறக்கும் போது கருமேகங்களை பார்த்தால் மனம் தளராதே. இன்னும் உயரமாக பறந்துசெல் என்று கூறினார்.அதுதான் என் வாழ்க்கையை வழி நடத்துகிறது'' என்று பேசியுள்ளார்.
மைதானத்தை சுற்றினேன்
மேலும் அவர் இந்திய அணியில் சேர முடியாமல் கஷ்டப்பட்ட இரண்டு வருடங்களை குறித்தும் பேசி இருக்கிறார். ''இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் இரண்டு வருடம் கஷ்டப்பட்டேன். நன்றாக ஆடியும் வாய்ப்பு கிடைக்காத போது கோபம் அடைந்தேன். ஒருநாள் ஈடன் கார்டன் மைதானத்தை கோபத்தில் 21 முறை சுற்றி வந்தேன். பின் எல்லாம் மாறியது அணியில் இணைந்தேன். நல்ல பார்மில் இருக்கும் போதே என்னுடைய ஓய்வை அறிவித்தேன்'' என்று பேசியுள்ளார்.
சச்சின் கேட்ட கேள்வி
அதேபோல் சச்சின் அவரிடம் கேட்ட முக்கியமான கேள்வி ஒன்றை குறித்தும் அவர் பேசியுள்ளார். அதில் ''நான் ஓய்வு குறித்து அறிவித்த போது சச்சின் என்னிடம் 'ஏன் ஓய்வு குறித்து அவசரப்பட்டீர்கள்' என்று கேட்டார். எனக்கு தெரியும் அதுதான் சரியான நேரம் என்று. உங்களை எல்லோரும் ஒதுக்கும் போது நீங்கள் உங்களின் முழு திறமையை வெளிப்படுத்துவீர்கள். பலருடைய புறக்கணிப்பு உங்களுக்கு பெரிய பாடத்தை கற்றுத்தரும். நான் நிறையாக கற்றுக்கொண்டேன்'' என்று கூறியுள்ளார்.
மீண்டும் அப்படி செய்ய மாட்டேன்
2002 ஜூலை 13ல் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா பெற்ற வெற்றியை யாரும் மறக்க மாட்டார். அதுகுறித்து கங்குலி தற்போது பேசியுள்ளார். அதில் ''அப்போது இந்திய வெற்றி பெற்றதும் நான் சட்டையை கழட்டி கத்தினேன். இப்போதும் என்னை பற்றி எந்த சேனலில் பேசினாலும் அந்த புகைப்படத்தைத்தான் போடுவார்கள். ஆனாலும் நான் பல சாதனைகளை செய்து இருக்கிறேன். இன்னொரு முறை கண்டிப்பாக அப்படி சட்டையை கழட்டி கொண்டாட மாட்டேன்" என்று காமெடியாக பேசினார்.