அணி மீது விமர்சனம்
2019 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதியுடன் வெளியேறியது, இந்திய அணியில் எடுக்கப்பட்ட சில முடிவுகள் கடும் விவாத்திற்கு உள்ளானது. அதற்கு பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் துணை பயிற்சியாளர்கள் தான் காரணம் என கூறப்பட்டது.
புதிய பயிற்சியாளர்
அவர்களது பதவிக் காலம் உலகக்கோப்பை தொடருடன் முடிவடையும் நிலையில், அவர்களுக்கு நேரடியாக பதவி நீட்டிப்பு அளிக்காமல், பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பம் கோரி இருக்கிறது பிசிசிஐ. அதனால், இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர்நியமிக்கப்படுவார் என பரவலாக பேசப்பட்டு வருகிறது.
கங்குலி, சேவாக் பின்னடைவு
ரவி சாஸ்திரி மீண்டும் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. ஆனால், ரசிகர்கள் விரும்பும் கங்குலி, சேவாக், விவிஎஸ் லக்ஷ்மன் போன்ற பல ஜாம்பவான்கள் இந்திய அணிக்கு பயிற்சியாளராக ஆக முடியாத நிலை உள்ளது.
சிக்கலான விதிகள்
பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு சில குறைந்தபட்ச தகுதிகள் இருக்க வேண்டும் என பிசிசிஐ கூறியுள்ளது. அதில் ஒன்று 30 டெஸ்ட் போட்டிகள் அல்லது 50 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்க வேண்டும் என்பது. மற்றொன்று, குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணிக்கோ அல்லது மூன்று ஆண்டுகள் உள்ளூர் அணிக்கோ பயிற்சி அளித்து இருக்க வேண்டும் என்பது. இந்த இரண்டாவது விதி தான் சிக்கல்.
கங்குலி, சேவாக் - தகுதி இல்லை
கங்குலி, சேவாக் இருவரும் ஐபிஎல் அணிகளுக்கு ஆலோசகராக இருந்துள்ளார்கள். ஆனால், அதிலும் மூன்று ஆண்டுகள் பணியாற்றவில்லை. எனவே, இவர்கள் இருவருக்கும் பயிற்சியாளராக மூன்று ஆண்டு அனுபவம் இல்லை என்பதால் விண்ணப்பிக்க முடியாது.
ரவி சாஸ்திரி நீட்டிப்பா?
ரவி சாஸ்திரிக்கு மீண்டும் சிவப்புக் கம்பளம் விரித்து பிசிசிஐ அழைத்தாலும் ஆச்சரியமில்லை. வெளிநாட்டு பயிற்சியாளர்களை தேர்வு செய்யும் முடிவு இருந்தால் மட்டுமே ரவி சாஸ்திரிக்கு வாய்ப்பு கிடைக்காது. இந்திய பயிற்சியாளர் தான் வேண்டும் என்றால் ரவி சாஸ்திரி தொடர்ந்து பயிற்சியாளராக இருப்பார் என்கிறார்கள்.