புதிய பயிற்சியாளர்
2019 உலகக்கோப்பை தொடருக்கு பின் இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர் தேர்வு செய்ய விண்ணப்பம் பெறப்பட்டு வருகிறது. தற்போது பயிற்சியாளர் பதவியில் இருக்கும் ரவி சாஸ்திரிக்கும் வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது.
பலத்த போட்டி
தலைமை பயிற்சியாளர் பதவிக்கு மட்டும் இதுவரை 2000 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக ஒரு செய்தி வலம் வந்து கொண்டு இருக்கிறது. இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு பலத்த போட்டி நிலவி வருகிறது.
கங்குலி விருப்பம்
இந்த நிலையில், கங்குலியிடம் அவருக்கு இந்திய அணியின் பயிற்சியாளராக விருப்பம் இல்லையா என கேட்ட போது, நிச்சயம் எனக்கு விருப்பம் உள்ளது. ஆனால், இப்போது இல்லை. இன்னும் ஒரு பதவிக் காலம் போகட்டும். அப்போது நானும் கோதாவில் குதிப்பேன் என கூறினார்.
சிக்கல் என்ன?
கங்குலி இப்போதே பயிற்சியாளர் பதவிக்கு முயற்சி செய்யாமல் இருப்பதற்கு சில சிக்கல்களை கை காட்டுகிறார்கள். ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் ஆலோசகர், வங்காள கிரிக்கெட் போர்டின் தலைவர் பதவி, தொலைக்காட்சி வர்ணனையாளர், மேற்கு வங்காள தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்று என பல பணிகளில், ஒப்பந்தங்களில் சிக்கி இருக்கிறார் கங்குலி.
பிசிசிஐ தேர்தலும் இருக்கு
மேலும், அடுத்த சில மாதங்களில் பிசிசிஐ தேர்தலும் வருகிறது. கங்குலி பிசிசிஐ தலைவர் பதவிக்கு நின்றால் வெற்றி பெறுவார் என செய்திகள் முன்பு கூறப்பட்டது. அதனால், பிசிசிஐ தேர்தலில் கங்குலி தலைவராக காய் நகர்த்துகிறாரா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
மீண்டும் ரவி சாஸ்திரி
மேலும், இந்த முறை எத்தனை பேர் முயற்சி செய்தாலும் ரவி சாஸ்திரி தான் மீண்டும் பயிற்சியாளர் பதவியில் அமர்த்தப்படுவார் என கூறப்படுகிறது. அந்த அளவிற்கு உள் வேலைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. அதை தெரிந்து கொண்டும் கங்குலி பின் வாங்கி இருக்கலாம்.