தென்னாப்பிரிக்காவிடம் தோற்ற இந்தியா
கடந்த 2011ல் நடைபெற்ற உலக கோப்பை தொடரில் இந்தியா அபாரமாக விளையாடி கோப்பையை கைப்பற்றியது. அந்த தொடரில் பங்கேற்ற அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி, தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் மட்டும் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை கண்டது.
பிரசன்னா அகோரம் பாராட்டு
இந்த தொடரில் தென்னாப்பிரிக்காவிற்கு வழிகாட்டியாக இருந்தார் இந்திய கிரிக்கெட் நிபுணர் பிரசன்னா அகோரம். இந்த தொடரில் இந்தியாவின் பௌலிங்கை விட பேட்டிங் மிகவும் சிறப்பாக இருந்ததாகவும், வீரேந்திர சேவாக், கவுதம் கம்பீர், விராட் கோலி, சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா உள்ளிட்டவர்கள் சிறப்பாக ஆடியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வலிமையாக இருந்த இந்திய அணி
ரவிசந்திரன் அஸ்வினின் யூடியூப் சேனலுக்காக பேசிய அகோரம், தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக நாக்பூரில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்பதற்கு முன்னதாக இந்திய அணி மிகவும் வலிமையாக இருந்ததாகவும் அதனால் பௌலர்களை குறிப்பாக ஷாகிர் கானை குறிவைத்து காய் நகர்த்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஷாகிர் கான் சிறப்பு
அந்த தொடரில் பௌலர் ஷாகிர் கான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். கேப்டன் தோனியும் அவரை சரியான முறையில் பயன்படுத்தியிருந்தார். தென்னாப்பிரிக்காவிற்கு முன்பு வங்கதேசம், இங்கிலாந்து, ஐயர்லாந்து மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு எதிராக சொற்பமான ரன்களை கொடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார் ஷாகிர்.
ஷாகிரை சிறப்பாக பயன்படுத்திய தோனி
அனைத்து போட்டிகளிலும் முதலில் 5 ஓவர்களை போடும் ஷாகிர் கான், அடுத்ததாக நெருக்கடியான நேரங்களில் அடுத்த ஓவர்களை போட்டு விக்கெட்டுகளை வீழ்த்தியதாக தெரிவித்துள்ள அகோரம், டெத் ஓவர்களில் ஷாகிரின் பௌலிங் மிகவும் சிறப்பாக இருந்ததாக சுட்டிக் காட்டியுள்ளார்.
தந்திரம் வகுத்த அகோரம்
இந்நிலையில் 37வது ஓவர்களுக்குள் பேட்டிங் பவர்ப்ளேவை கொண்டுவந்து ஷாகிரின் 9 ஓவர்களை போட வைத்துவிட வேண்டும் என்று திட்டமிட்டு செயல்பட்டதாகவும், அதேபோல அவர் தனது 9 ஓவர்களையும் போட்டுவிட்டு, கடைசி ஓவருக்கு முன்பு ஒரு ஓவரை போட்டதாகவும் இதனால் தென்னாப்பிரிக்கா அவரது அதிரடி பௌலிங்கிலிருந்து தப்பி வெற்றி பெற்றதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.