டி20 ஆதிக்கம்
கடந்த 15 வருடங்களில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆட்டத்திறன் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெகுவாக குறைந்துவிட்டது எனலாம். குறிப்பாக, பிரைன் லாரா, சந்தர்பால், ராம்நரேஷ் சர்வான் போன்ற மெகா வீரர்கள் ஓய்வு பெற்ற பிறகு, அந்த அணியும் ஓய்வு பெற்றது போன்ற நிலைக்கு சென்றுவிட்டது. 20 ஆண்டுகள் முன்பு வரை வரை இந்திய மண்ணில் இந்திய அணியை வீழ்த்தும் திறமையை பெற்றிருந்த வெஸ்ட் இண்டீஸ், இன்று டி20 போட்டிகளில் மட்டும் ஆதிக்கம் செலுத்துகிறது. இரண்டு முறை டி20 உலக சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணியில் உருவாகும் வீரர்கள் அனைவரும் டி20 கிரிக்கெட்டை மையமாக வைத்தே அணிக்குள் நுழைகிறார்கள் தவிர்த்து, அவர்களிடம் டெஸ்ட் கிரிக்கெட் ஆட வேண்டும் போன்ற ஆர்வத்தை காண முடிவதில்லை.
மிரட்டல் வெற்றி
இப்படி சில விமர்சனங்கள் ஒருபக்கம் இருந்தாலும், டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரை உலகின் ராஜாவாக வலம் வருகிறது வெஸ்ட் இண்டீஸ். எப்பேர்ப்பட்ட அணியாக இருந்தாலும், ஊதித் தள்ளிவிடுகிறார்கள். 2016ல் இந்தியாவில் நடந்த டி20 உலகக் கோப்பையில் தோனி தலைமையிலான இந்திய அணியை கதற கதற அடித்ததை எந்த ரசிகரால் மறந்திருக்க முடியும்? இன்று வரை டி20 கிரிக்கெட் என்றால் அவர்கள் தான் ராஜா. அப்படித்தான் தற்போது முதல் டி20 வரை தென்னாப்பிரிக்க அணியை வெஸ்ட் இண்டீஸ் டீல் செய்தது. செயின்ட் ஜார்ஜில் நடைபெற்ற முதல் போட்டியில், தென்னாப்பிரிக்கா நிர்ணயித்த 161 ரன்கள் இலக்கை, ஜஸ்ட் 15 ஓவர்களில் 2 விக்கெட் மட்டும் இழந்து மிரட்டலாக வெற்றிப் பெற்றது வெஸ்ட் இண்டீஸ்.
கடைசி ஓவர் த்ரில்
ஆனால், 2வது டி20 போட்டியில், தென்னாப்பிரிக்கா 16 ரன்களில் வெற்றிப் பெற, நேற்று (ஜூன்.29) 3வது போட்டி நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா, 8 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுக்க, எப்படியும் ஜெயித்துவிடலாம் என வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கியது. ஒருபக்கம் விக்கெட் வீழ்ச்சி, மறுபக்கம் சிக்ஸர்கள் என அப்படி இப்படி ஒப்பேற்றிய வெஸ்ட் இண்டீசுக்கு கடைசி ஓவரில் வெற்றிப் பெற 15 ரன்கள் தேவைப்பட்டது.
வெஸ்ட் இண்டீஸ் தோல்வி
ஃபேபியன் ஆலன் களத்தில் நிற்க, ரபாடா பந்து வீசினார். ஆனால், இதில், 13 ரன்கள் எடுக்கப்பட்டது. முதல் 5 பந்தில் 7 ரன்கள் மட்டும் எடுக்கப்பட, கடைசி பந்தில் சிக்ஸர் அடித்தும் 1 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது வெஸ்ட் இண்டீஸ். ஐபிஎல் தொடரிலேயே, சூப்பர் ஓவர் அல்லது லாஸ்ட் ஓவர் ஸ்பெஷலிஸ்ட்டாக அறியப்படும் ரபாடா வீசியதால் தென்னாப்பிரிக்கா தப்பித்தது. வேறு எந்த பவுலர் வீசியிருந்தாலும்.. ஏன், நம்ம சென்னை சூப்பர் கிங்ஸ் பவுலர் லுங்கி ங் கிடி வீசியிருந்தால் கூட வெ.இ. ஜெயித்திருக்கும். இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-1 என்று தென்னாப்பிரிக்கா லீடிங்கில் உள்ளது.