டி20 உலகக் கோப்பை
உலகெங்கும் புட்பால், பார்முலா ஒன் என பல விளையாட்டுகளிலும் இனவெறிக்கு எதிரான தங்கள் எதிர்ப்பை இப்படி முட்டி போட்டுப் பதிவு செய்து வருகின்றனர். இருப்பினும், சில வெள்ளை இன வீரர்கள் இப்படி முட்டி போட மறுத்தும் உள்ளனர். கிரிக்கெட்டை பொறுத்தவரை ஐசிசியின் பரிந்துரையின் பெயரில் தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பை டி 20 தொடரிலும் அனைத்து அணி வீரர்களும் முட்டி போட்டு இனவெறிக்கு எதிரான பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
டி காக் இல்லை
ஆனால் தென்னாப்பிரிக்காவின் தொடக்க வீரரும் விக்கெட் கீப்பருமான டி காக் மண்டியிட மறுத்து உள்ளார். அணியின் நிர்வாகம் உத்தரவிட்டும் கூட, அவர் இந்த பிரசாரத்திற்கு ஆதரவு தெரிவிக்க மறுத்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில் அவர் நேற்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் டி காக் இடம் பெறவில்லை. முதலில் சொந்த காரணங்களால் அவர் போட்டியில் விளையாடவில்லை என கூறப்பட்ட நிலையில், அதன் பின்னரே "taking a knee" பிரசாரம் தொடர்பாகவே அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்பது தெரிய வந்தது. அடுத்து வரும் போட்டிகளில் அவர் விளையாடுவரா இல்லையா என்பது குறித்து இதுவரை எந்தவொரு தெளிவான தகவலும் வெளியிடப்படவில்லை.
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம்
கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்க அணியில் இடம்பெற்றிருந்த சில வீரர்கள் முட்டி போட மறுத்துவிட்டனர். இந்த விஷயம் மிகப் பெரியளவில் சர்ச்சையான நிலையில் அனைத்து வீரர்களும் Black Lives Matter இயக்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் முட்டி போட வேண்டும் என தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டிருந்தது.
கேப்டன் டெம்பா பவுமா
இந்தச் சூழலில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா இது தொடர்பாக பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "டிகாக் ஒன்றும் குழந்தை இல்லை. அவருக்கு எனத் தனி கொள்கை மற்றும் விருப்பங்கள் உள்ளது. அவருடைய முடிவையும் நம்பிக்கைகளையும் நாங்கள் மதிக்கிறோம், டிகாக் இன்னும் தென்னாப்பிரிக்க வீரர் தான். அவர் இன்னும் எங்களால் ஒருவர் தான். எனவே அவருக்குத் தேவையான ஆதரவை நாங்கள் எப்போதும் அளிப்போம்.
ஆச்சரியம்
உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் டி காக்கின் இந்த முடிவு ஆச்சரியப்படுத்தியது. அவர் அணியின் மூத்த மற்றும் முக்கிய வீரர். அவர் கடைசி நேரத்தில் போட்டியில் இல்லை என்பது எதிர்பார்க்காத ஒன்று. இந்த நிலை எத்தனை காலம் தொடரும் என எனக்குத் தெரியாது. டிகாக்கை அணியில் இருந்து நீக்கிவிட்டு அவருக்குப் பதிலாக வேறு வீரரைச் சேர்ப்பது குறித்து என்னால் எதுவும் முடிவு செய்ய முடியாது. அதை அணியின் பயிற்சியாளரும் தேர்வாளர்களுமே முடிவு செய்ய வேண்டும்.
ஆட்டத்திலேயே கவனம்
அடுத்து வரும் போட்டிகளில் கவனம் செலுத்தி வெற்றி பெறுவது மட்டுமே இப்போது எங்களது இலக்கு. களத்திற்கு வெளியே நடப்பது குறித்துச் சிந்திக்கத் தொடங்கினால், எங்களால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாது. வெற்றி தோல்வி என்பது போட்டியில் நாம் எவ்வளவு சிறப்பாக விளையாடுகிறோம் என்பதை வைத்தே தீர்மானிக்கப்படுகிறதே தவிர, மற்ற விஷயங்களை வைத்து இல்லை" என்று அவர் குறிப்பிட்டார்.அடுத்து வரும் போட்டிகளில் கவனம் செலுத்தி வெற்றி பெறுவது மட்டுமே இப்போது எங்களது இலக்கு. களத்திற்கு வெளியே நடப்பது குறித்துச் சிந்திக்கத் தொடங்கினால், எங்களால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாது. வெற்றி தோல்வி என்பது போட்டியில் நாம் எவ்வளவு சிறப்பாக விளையாடுகிறோம் என்பதை வைத்தே தீர்மானிக்கப்படுகிறதே தவிர, மற்ற விஷயங்களை வைத்து இல்லை" என்று அவர் குறிப்பிட்டார்.
கூல் கேப்டன்
இந்த செய்தியாளர் சந்திப்பில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமாவிடம் கிரிக்கெட்டை தாண்டிய பல்வேறு விஷயங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இருப்பினும், அவர் அனைத்தையும் சூப்பராக கையாண்டார். இதற்காக அவரை பலரும் இணையத்தில் பாராட்டி வருகின்றனர். தென்னாப்பிரிக்க அணியின் முதல் கறுப்பின கேப்டன் டெம்பா பவுமா ஆவர். இவர் கேப்டனாக பொறுப்பேற்ற சில காலத்திலேயே இவரது கேப்டன்சியை பலரும் பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.