சம்பள பிடித்தம் செய்யும் முடிவு
கொரோனா வைரஸ் பாதிப்பால் சர்வதேச அளவில் முக்கிய கிரிக்கெட் போட்டிகள் ரத்து அல்லது ஒத்திவைக்கப்பட்டுள்ளன. பல நாட்டு கிரிக்கெட் போர்டுகளும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றன. இந்நிலையில் கிரிக்கெட் தென்னாப்பிரிக்காவும் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. தனது வீரர்களுக்கு சம்பள பிடித்தம் செய்யவும் திட்டமிட்டு நடவடிக்கை மேற்கொண்டது.
உள்ளூர் போட்டியை நடத்த முடிவு
இந்நிலையில் இந்த நிதி நெருக்கடியை சமாளிக்கும்வகையில் உள்ளூர் போட்டியை நடத்தி அதை தொலைக்காட்சிக்கு விற்க கிரிக்கெட் தென்னாப்பிரிக்கா முடிவு செய்துள்ளது. பயிற்சி ஆட்டங்களை துவங்கலாம் என்று அந்நாட்டு விளையாட்டுத்துறை அமைச்சர் நாத்தி ம்தேத்வா கடந்த மே 30ம் தேதி ஒப்புதல் அளித்திருந்தார்.
காலி மைதானத்தில் போட்டி
தென்னாப்பிரிக்க அணி வீரர்களை கொண்டு உள்ளூர் போட்டியை நடத்தி அதன் உரிமத்தை தொலைக்காட்சிக்கு விற்று அதன்மூலம் கிரிக்கெட் தென்னாப்பிரிக்காவின் நிதி நெருக்கடியை சமாளிக்க தற்போது முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும் விளையாட்டுத்துறையின் அனுமதிக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த போட்டி ரசிகர்கள் இல்லாத காலி மைதானத்தில் நடக்கவுள்ளது.
மேற்கிந்திய தீவுகள், இந்தியா தொடர்கள்
தென்னாப்பிரிக்காவின் செஞ்சூரியனில் வரும் 27ம் தேதி திட்டமிடப்பட்டுள்ள இந்த போட்டியில் 3 அணிகளாக பிரிந்து தென்னாப்பிரிக்க வீரர்கள் ஆடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டரை மாதங்களாக வீட்டில் முடங்கியுள்ள தென்னாப்பிரிக்க வீரர்களுக்கு இது நல்லதொரு பயிற்சியாகவும் இருக்கும் என்று தெரிவித்துள்ள கிரிக்கெட் தென்னாப்பிரிக்கா, ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறவுள்ள மேற்கிந்திய தீவுகள் மற்றும் இந்திய அணிகளுக்கு எதிரான தொடர்களுக்கு இது உதவிபுரியும் என்றும் கூறியுள்ளது.