கேப் டவுன் : கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கிரிக்கெட் தென்னாப்பிரிக்கா தனது அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளையும் 60 நாட்களுக்கு ரத்து செய்து அறிவித்துள்ளது.
சர்வதேச அளவில் அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை 7,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியா -தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையில் நடைபெறவிருந்த சர்வதேச ஒருநாள் தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளதையடுத்து, கொல்கத்தாவில் இருந்து துபாய் வழியாக தென்னாப்பிரிக்க வீரர்கள் இன்று தங்களது நாட்டிற்கு செல்லவுள்ளனர்.
உலக அளவில் கடந்த சில மாதங்களாக அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது கொரோனா வைரஸ். இதன் பாதிப்பு காரணமாக சர்வதேச அளவில் இதுவரை 7,000 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா வைரசை தொற்றாக உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது.
கொரோனா பீதி காரணமாக சர்வதேச அளவில் பல நிகழ்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. விளையாட்டுத்துறையிலும் முக்கிய நிகழ்வுகள் ரத்து அல்லது ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலும் ஐபிஎல் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்தியா -தென்னாப்பிரிக்கா இடையிலான சர்வதேச ஒருநாள் தொடரும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளதையடுத்து, தென்னாப்பிரிக்க வீரர்கள் தங்களது சொந்த நாட்டிற்கு திரும்பவுள்ளனர். கொல்கத்தாவிலிருந்து துபாய் மார்க்கமாக, அவர்கள் இன்று தென்னாப்பிரிக்காவிற்கு செல்லவுள்ளனர். இந்நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக கிரிக்கெட் தென்னாப்பிரிக்கா அடுத்த 60 நாட்களுக்கு தங்களது நாட்டில் நடைபெறவிருந்த அனைத்து கிரிக்கெட் போட்டிகளையும் ரத்து செய்து அறிவித்துள்ளது.
கிரிக்கெட் தென்னாப்பிரிக்காவின் தலைமை நிர்வாகி ஜாக்குவஸ் பால் நிர்வாகிகளுக்கு இதுகுறித்த உத்தரவை பிறப்பித்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பை குறைப்பதற்காக இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த மாத இறுதியில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஆஸ்திரேலியாவுடனான மகளிர் தொடரும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதேபோல முன்னதாக தென்னாப்பிரிக்காவில் நடைபெறவிருந்த சாக்கர் லீக்,
சூப்பர் ரக்பி, இரண்டு மாரத்தான் ஓட்டங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.