சர்வதேச ஒருநாள் போட்டிகள்
தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையில் நடைபெற்றுவரும் சர்வதேச ஒருநாள் போட்டித் தொடரின் முதல் போட்டி நியூலாண்ட்சில் நடைபெற்ற நிலையில், அதில் இங்கிலாந்தை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி கொண்டுள்ளது. அணியின் புதிய கேப்டன் குயின்டன் டி காக்கின் சதம் மற்றும் மற்றொரு வீரர் டெம்பா பவுமாவின் 98 ரன்கள் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றது.
தென்னாப்பிரிக்க பௌலர்கள் அபாரம்
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கேப்டன் குயின்டன் டி காக் தலைமையில் தென்னாப்பிரிக்க அணி இங்கிலாந்து அணியுடன் மோதியது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியினர் 258 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து ஆட்டத்தை நிறைவு செய்தனர். அணியின் ஜோ டென்லே 87 ரன்களும் கிறிஸ் வோக்ஸ் 40 ரன்களும் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ஆனால் தென்னாப்பிரிக்காவின் பந்துவீச்சுக்கு முன்பு அணியின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்தது.
சதமடித்த கேப்டன்
இதையடுத்து 259 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய தென்னாப்பிரிக்காவின் துவக்க ஆட்டக்காரர் ரீசா ஹென்ட்ரிக்ஸ் சொற்ப ரன்களில் வெளியேற, தொடர்ந்து குயின்டன் டி காக்குடன் இணைந்த டெம்பா பவுமா 98 ரன்களை அடித்து எதிரணி பௌலர் கிறிஸ் ஜோர்டனின் பந்தில் ஆட்டமிழந்தார். இதன்மூலம் சதமடிக்கும் அவரது கனவு தரைமட்டமானது. ஆனால் 113 பால்களில் டி காக் 107 ரன்களை அடித்து சாதனை புரிந்தார்.
170 பந்துகளில் 173 ரன்கள் குவிப்பு
இரண்டாவது விக்கெட்டின்போது பார்ட்னர்ஷிப்பில் குயின்டன் டி காக் மற்றும் டெம்பா பவுமா இருவரும் இணைந்து 170 பந்துகளில் 173 ரன்களை குவித்து ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்தனர். இந்த வெற்றியின்மூலம் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள இங்கிலாந்தை 4வது இடத்தில் உள்ள தென்னாப்பிரிக்கா வெற்றி கொண்டுள்ளது.
இங்கிலாந்து கேப்டன் கருத்து
நியூலாண்ட்சில் நடைபெற்ற இந்த முதல் போட்டியை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கன், அனைத்து பிரிவுகளிலும் தென்னாப்பிரிக்கா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாக தெரிவித்தார். இதனிடையே, இந்தப் போட்டியில் 40 ரன்களை அடித்த கிறிஸ் வோக்ஸ் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தனது 100 போட்டிகளை பூர்த்தி செய்துள்ளார்.