கான்வே 50
இப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 217 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ரஹானே 49 ரன்களும், விராட் கோலி 44 ரன்களும் எடுத்தனர். நியூசிலாந்து தரப்பில் ஜேமிசன் 22 ஓவர்கள் வீசி 31 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பிறகு, தங்கள் முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து, நேற்றைய மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில், 2 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இரட்டை சதம் விளாசிய டெவோன் கான்வே 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, டாம் லாதம் 30 ரன்களில் வெளியேறினார். இந்தியா சார்பில், அஷ்வின், இஷாந்த் தலா 1 விக்கெட் எடுத்தனர்.
ஆட்டம் பாதிப்பு
இந்நிலையில், இன்று நான்காம் நாள் ஆட்டம் மழையால் பாதிப்படைய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்று போட்டி தொடங்கும் நேரத்தில், சவுத்தாம்ப்டனில் சாரல் மழை பெய்வதால், ஆட்டம் தொடங்குவது பாதிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி, காலை 10 மணிக்கு 100 சதவிகிதம் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்திருந்த நிலையில், வாக்கு தவறால் மழை வந்து பெய்து கொண்டிருக்கிறது. காலை 11 மணிக்கு 98 சதவிகித மழை வாய்ப்பும், மதியம் 12 மணிக்கு 95 சதவிகித மழை வாய்ப்பும் உள்ளதாக கூறியுள்ளது.
70 சதவிகித மழை
அப்படியே போட்டி தொடங்கினாலும், இன்றைய நான்காம் நாள் ஆட்டம் பல முறை மழையால் பாதிக்கப்படும் என்று தெரிகிறது. அதுமட்டுமல்ல, இன்றைய ஒட்டுமொத்த நாளும் மழையால் பாதிக்கப்படவும் வாய்ப்பிருக்கிறதாம்.ஏனெனில், மாலை 6 மணி வரை அங்கு மழை பெய்வதற்கு 70 சதவிகிதத்துக்கும் அதிகமான வாய்ப்பு இருப்பதாக இங்கிலாந்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மாற்று நாள் உறுதி
ஏற்கனவே, முதல் நாள் ஆட்டம் முழுவதும் காலி. 2வது மற்றும் 3வது நாள் ஆட்டமும் முழுதாக நடைபெறாத நிலையில், இன்றைய நான்காம் நாள் ஆட்டமும் தாமதமாகியுள்ளது. இதனால், நிச்சயம் ஜூன்.23ம் தேதியன்று ரிசர்வ் டே (மாற்று நாள்) ஒதுக்கப்படும் என்றே தெரிகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.