மைல்கல்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா என்று உலகின் மிக முக்கியமான வலிமையான அணிகளை பின்னுக்குத் தள்ளி, இந்திய அணி பைனலுக்கு முன்னேறி இருப்பது அவ்வளவு சாதாரண விஷயமல்ல. இதற்காக பல டெஸ்ட் தொடர்களில் விளையாடி, புள்ளிகளை சேகரித்து, இந்த இடத்திற்கு வந்துள்ளது இந்திய அணி. இதில், குறிப்பாக, இந்தாண்டு தொடக்கத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், முதல் டெஸ்ட் போட்டியின் தோல்விக்கு பிறகு இரண்டு போட்டிகளில் வென்று தொடரைக் கைப்பற்றியது, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதில் முக்கிய மைல்கல்லாக அமைந்தது.
கேள்விக்குறி
இந்நிலையில், இன்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடக்கவுள்ள சவுத்தாம்ப்டனில், தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், திட்டமிட்டப்படி ஆட்டம் நடைபெறுமா? என்பது பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. accuweather.com தகவலின் அடுத்த ஐந்து நாட்களுக்கு இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையம்
மேலும், இன்று (ஜூன்.18) மேகமூட்டமான நாளாக இருக்கும், அதிகாலை முதல் பலத்த மழை பெய்யும். சவுத்தாம்ப்டனில் இன்று காலை 6 மணி முதல் சனிக்கிழமை காலை 6 மணி வரை இடியுடன் கூடிய மழை பெய்யும்" என்று இங்கிலாந்து வானிலை ஆய்வு மையத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இரு நாட்களுக்கு மழை
"சில பகுதிகளில் நாள் முழுவதும் 40 மி.மீ வரை மழை பெய்யக்கூடும், இருப்பினும் வானிலை நிலைமைகளின் தன்மை காரணமாக மழை பெய்யும் துல்லியமான இடங்களை கணிப்பது சிரமம்" என்று கூறியுள்ளார். வெள்ளி, சனி ஆகிய இரு நாட்களுக்கும் மழை இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
காலை 10 மணி நிலவரப்படி
இங்கிலாந்து வானிலை ஆய்வு மையம் நிலவரப்படி, சவுத்தாம்ப்டனில் இன்று காலை 10 மணியளவில் 80% மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதான் போட்டி தொடங்கும் நேரம். 12 மணியளவில் 90% மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், 2 மணியளவில் 90% மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், 5 மணியளவில் 80% மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெளிவாக குறிப்பிட்டுள்ளது.