மெல்போர்ன்: ஹர்பஜன் சிங் மீதான இனவெறி புகாரை கைவிட்ட விவகாரத்தில் பணம் பெருமளவில் கைமாறியுள்ளதாக ஆஸ்திரேலிய மீடியாக்கள் கூறியுள்ளன. ஆஸ்திரேலிய வீரர்களும் ஹர்பஜன் சிங் விவகாரம் தங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை, மாறாக கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர். ஹர்பஜன் சிங் மீதான இனவெறி சர்ச்சையை நேற்று நடந்த ஐசிசி மேல் முறையீட்டு ஆணையர் ஹன்சன் அளித்த தீர்ப்பு முடிவுக்கு கொண்டு வந்தது. ஹர்பஜன் இனவெறி தொடர்பான வார்த்தையை உபயோகிக்கவில்லை என்று நீதிபதி ஹன்சன் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார். மேலும் சைமண்ட்ஸ்தான் முதலில் பிரச்சினையை ஆரம்பித்தார், அதற்கு ஹர்பஜன் சிங் பதிலளித்தார் என்றும் கூறியுள்ளார். இந்த நிலையில் இந்தத் தீர்ப்பின் பின்னணியில் பணம் பெருமளவில் கைமாறியுள்ளதாக ஆஸ்திரேலிய மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதுகுறித்து சிட்னி மார்னிங் ஹெரால்டு வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியாவின் ஆதிக்கத்தையும், பண பலத்தையும் இது காட்டுவதாக உள்ளது. இதை ஆஸ்திரேலிய வீரர்கள் அவ்வளவு சீக்கிரம் விட்டு விட மாட்டார்கள் என்று கூறியுள்ளது. இந்தக் கருத்தை ஒரு ஆஸ்திரேலிய வீரர் கூறியதாக அது தெரிவித்துள்ளது. இந்தியாவிடம் உள்ள பண பலத்தை அவர்கள் காட்டி விட்டதாகவும் அந்த வீரர் தெரிவித்ததாக அப்பத்திரிக்கை செய்தி தெரிவிக்கிறது. தி டெய்லி டெலிகிராப் இதழில், ஹர்பஜன் சிங் விவகாரத்தில் தனது அதிகார பலத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் காட்டியுள்ளது. இதைத்தான் ஹர்பஜன் சிங் விவகாரம் வெளிக்காட்டுகிறது என்று கூறியுள்ளது. மேலும் பல இதழ்களிலும், இது பண பலம் பேசியுள்ளதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் இந்தப் புகார்களை இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியம் இந்த விவகாரத்தில் யாரையும் மிரட்டவில்லை, தனது அதிகாரத்தைக் காட்டவும் இல்லை என்றும் அது தெரிவித்துள்ளது. பான்டிங் அதிருப்தி: இதற்கிடையே, ஹர்பஜன் மீதான விசா ரணையின் முடிவு எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை என ஆஸ்திரேலிய கேப்டன் பாண்டிங் தெரிவித்துள்ளார். பாண்டிங் இதுகுறித்துக் கூறுகையில், ஹர்பஜனின் விசாரணை மீதான தீர்ப்பில் எங்களுக்கு மகிழ்ச்சி இல்லை. இத்தீர்ப்பு எங்களது கோபத்தை ஏற்படுத்தியுள்ளது என்று கூறியுள்ளார்.