ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சாளராக திகழும் பிரெட் லீ, ஒரு காலத்தில் உலகையே அச்சுறுத்திய அதி வேகப் பந்து வீச்சாளர் ஆவார். தற்போது இவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்து வீச்சுப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுவரை இப்பொறுப்பில் பாகிஸ்தானின் வாசிம் அக்ரம் இருந்தார். சமீபத்தில்தான் அவர் தனது பொறுப்பிலிருந்து விலகினார். இதையடுத்து அவரது இடத்திற்கு பிரெட் லீ வந்துள்ளார். பிரெட் லீ தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முக்கியப் பந்து வீச்சாளராகவும் திகழ்வது குறிப்பிடத்தக்கது. அவர் 2 பொறுப்புகளையும் சேர்த்துக் கவனிக்கவுள்ளார்.
முன்பு இப்படித்தான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாகவும், முக்கியப் பந்து வீச்சாளராகவும் திகழ்ந்த ஷான் வார்ன், அந்த அணியின் பயிற்சியாளராகவும் செயல்பட்டார் என்பது நினைவிருக்கலாம்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிதான் 5வது ஐபிஎல் தொடரின் சாம்பியன் என்பது குறிப்பிடத்தக்கது.