மும்பை: மும்பையில் இன்று நடந்த கிரிக்கெட் வீரர்கள் ஏலத்தில், இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் டோணி ரூ. 6 கோடிக்கு விற்கப்பட்டார். அவரை பெரும் விலை கொடுத்து சென்னை அணி வாங்கியுள்ளது. அதேபோல முத்தையா முரளீதரனையும் சென்னை அணி ஏலத்தில் எடுத்துள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் 20-20 போட்டித் தொடரில் பங்கேற்கவுள்ள 8 அணிகளுக்கான வீரர்களை ஏலம் விடுவது இன்று முற்பகல் மும்பையில் தொடங்கியது. முதலில் ஆறு முக்கிய வீரர்கள் ஏலம் விடப்பட்டனர். அதில் அதிகபட்சமாக டோணியை ரூ. 6 கோடிக்கு சென்னை அணி ஏலத்தில் எடுத்தது. அதேபோல இலங்கை சுழற்பந்துவீச்சாளர் முத்தையா முரளீதரன் ரூ. 2.4 கோடிக்கு சென்னை அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார். அதிரடி வீரர் ஆடம் கில்கிறைஸ்ட் ரூ. 2.8 கோடிக்கு ஹைதராபாத் அணியால் வாங்கப்பட்டார். இலங்கை கேப்டேன் மகிளா ஜெயவர்த்தனேவை ரூ. 1.9 கோடிக்கு மொஹாலி அணி ஏலத்தில் எடுத்தது. ஜெய்ப்பூர் அணி, ஷான் வார்னேவை ரூ. 1.8 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. சோயிப் அக்தரை, ஷாருக்கானின் கொல்கத்தா அணி ரூ. 1.7 கோடிக்கு ஏலம் எடுத்தது. இன்றைய முதல் கட்ட ஏலத்தில் அதிக விலைக்குப் போனவர் டோணிதான். 2வது கட்ட ஏலத்தில் இலங்கை வீரர் ஜெயசூர்யா 9.75 லட்சம் டாலருக்கு விலை போயுள்ளார். அவரை மும்பை அணி வாங்கியுள்ளது. ஹர்பஜன் சிங் 8.50 லட்சம் டாலருக்கு விலை போயுள்ளார். அவரை மும்பை அணி வாங்கியுள்ளது. சங்கக்காராவை 7 லட்சம் டாலருக்கு மொஹாலி அணி விலைக்கு வாங்கியுள்ளது. அனில் கும்ப்ளேவை பெங்களூர் அணி 5 லட்சம் டாலருக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. டெல்லிக்கு திணேஷ் கார்த்திக்: விக்கெட் கீப்பர் திணேஷ் கார்த்திக்கை 5 லட்சத்து 20 ஆயிரம் டாலருக்கு டெல்லி அணி ஏலம் எடுத்தது. அதேபோல தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன் அப் டிவில்லியர்ஸை 3 லட்சம் டாலருக்கு டெல்லி அணி வாங்கியது. தென் ஆப்பிரிக்க விக்கெட் கீப்பர் மார்க் பெளச்சரை 4.50 லட்சம் டாலருக்கு பெங்களூர் அணி ஏலம் எடுத்தது. இன்னொரு விக்கெட் கீப்பரான பார்த்திவ் படேலை சென்னை அணி 3.25 லட்சம் டாலருக்கு ஏலம் எடுத்தது. மண்ணின் மைந்தரான திணேஷ் கார்த்திக்கை ஏலத்தில் எடுக்க சென்னை அணி அதிக ஆர்வம் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் கம்ரான் அக்மல், 1.50 லட்சம் டாலருக்கு ஜெய்ப்பூரால் வாங்கப்பட்டார். தைபூவுக்கு ஆள் இல்லை: ஜிம்பாப்வே வீரர் டாடென்டா தைபூவை ஏலம் கேட்க யாரும் முன்வரவில்லை. இதனால் அவர் ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் வைக்கப்பட்டார்.