டெல்லி: பத்ம விருதுகளைப் பெறுவதற்கு வராமல் புறக்கணித்து நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள கிரிக்கெட் வீரர்கள் டோணி மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோருக்கு அந்த விருதுகளை தராமல் நிறுத்தி வைப்பது குறித்து உள்துறை அமைச்சகம் பரிசீலனை செய்து வருகிறது.தேசிய அளவில் அளிக்கப்படும் கெளரவம் மிக்க உயரிய விருது பத்ம விருதுகள். இந்த விருது கிடைக்க நிறைய பேர் தவம் இருக்கிறார்கள்.ஆனால் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணி மற்றும் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் ஆகியோர் இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டு, அதுதொடர்பாக நடந்த நிகழ்ச்சிக்கு வராமல் புறக்கணித்து நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளனர்.டோணி, ஹர்பஜனின் இந்த செயல் தேசிய விருதை மட்டுமல்ல நாட்டையே அவமதிக்கும் செயல் என கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், பத்ம விருதுகள் உள்ளிட்ட தேசிய விருதுகள் பெறத் தேர்வு செய்யப்படும்போது கண்டிப்பாக நேரில் வந்து அவற்றைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும், உள்துறை அமைச்சகத்திற்கும் ஒரு கடிதம் எழுதியுள்ளது விளயாட்டு அமைச்சகம். அதில், பத்ம விருதுகளுக்கான வழிகாட்டும் விதிமுறைகளில் மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.இந்த புதிய விதிமுறைகளை ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது, அர்ஜூனா விருது, துரோணாச்சாரியா விருது, தியான் சந்த் விருது ஆகியவற்றுக்கும் அமல்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.புதிய விதிமுறைப்படி, விருது பெறத் தேர்வு செய்யப்பட்ட விளையாட்டு வீரர், வீராங்கனைகள் அவற்றை நேரில் வந்து பெற்றுக் கொள்ளாவிட்டால் விருதுகள் வாபஸ் பெறப்படும்.இதைத் தொடர்ந்து டோணி, ஹர்பஜன் சிங் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்ட பத்ம விருதுகளைத் திரும்பப் பெறுவது குறித்து தற்போது உள்துறை அமைச்சகம் பரிசீலனை செய்து வருகிறது.