டெல்லி: உலகிலேயே பெரிய பணக்கார அணிகளாக கருதப்பட்ட ஐபிஎல் அணிகளை விட பல மடங்கு பணக்கார அணியாக நியூயார்க் யாங்கீஸ் என்கிற பேஸ்பால் அணி உருவாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியம்தான் உலகிலேயே மிகப் பெரும் பணக்கார விளையாட்டு அமைப்பு. இந்திய கிரிக்கெட் வாரியம் உருவாக்கியுள்ள ஐபிஎல் லீக் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மிகப் பெருமளவில் பணம் புழங்கும் அமைப்பாக இது கருதப்படுகிறது. மேலும் ஐபிஎல்லின் மும்பை அணியை இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரான முகேஷ் அம்பானி ஏலத்தில் எடுத்ததால் மும்பை அணி உலகின் பெரும் பணக்கார அணியாக உருவெடுக்கும் வாய்ப்பும் உருவானது. ஆனால் நியூயார்க் யாங்கீஸ் பேஸ் பால் அணியுடன் ஒப்பிட்டால் மும்பை அணி பரம ஏழை அணியாகும். யாங்கீஸ் அணியின் பண பலத்துடன் மும்பையை ஒப்பிட்டால் 10ல் ஒரு பங்குதான் மும்பை அணியின் மதிப்பாகும். உலகின் 30 பெரிய பேஸ்பால் அணிகள் குறித்த விவரத்தை போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. அதில் யாங்கீஸ் அணிக்கு முதலிடம் கிடைத்துள்ளது. அதன் மதிப்பு 1.306 பில்லியன் டாலராகும். ஆனால் மொத்தம் உள்ள 8 ஐபிஎல் அணிகளின் ஒட்டுமொத்த மதிப்பும், 723.6 மில்லியன் டாலர்தான். ஐபிஎல் அணிகளிலேயே பெரும் பணக்கார அணியாக கருதப்படும் மும்பை அணியின் மதிப்பு 111.9 மில்லியன் டாலர் மட்டுமே. பெங்களூர் ராயல் சேலஞ்சர் அணியின் மதிப்பு 111.6 மில்லியன் டாலராகும். ஹைதராபாத் டெக்கான் சார்ஜர் அணியின் மதிப்பு 100 மில்லியன் டாலராகும். இதன் மூலம் ஐபிஎல் அணிகள்தான் உலகிலேயே அதிக மதிப்புடைய அணிகள் என்ற கருத்து தவிடுபொடியாகியுள்ளது.