30 வயதான திரிவேதியையும் தங்களது பிக்ஸிங் வேலைக்கு ஈடுபடுத்தப் பார்த்தார் இந்த வழக்கில் சிக்கி கைதாகியுள்ள ராஜஸ்தான் வீரர் அஜித் சண்டிலா. புக்கிகள் நடத்திய ஒரு பார்ட்டிக்கு வருமாறு திரிவேதியை அழைத்துள்ளார் சண்டிலா. ஆனால் வர மறுத்து விட்டாராம் திரிவேதி. மேலும், புக்கிகள் தர முன்வந்த பணம் மற்றும் அன்பளிப்புகளையும் அவர் நிராகரித்து விட்டார்.
இதையடுத்து இந்த வழக்கில் திரிவேதியை அரசுத் தரப்பு சாட்சியாக காவல்துறை சேர்த்துள்ளது. திரிவேதி அளிக்கப் போகும் வாக்குமூலம், வழக்கை மேலும் வலுவாக்கும் என்று காவல்துறை நம்புகிறது.
திரிவேதியைப் போலவே, ராஜஸ்தான் அணியைச் சேர்ந்த பிராட் ஹாட்ஜ், கெவின் கூப்பர் ஆகியோரையும் சண்டிலா அணுகியுள்ளார். அவர்களும் இந்த அழைப்பை நிராகரித்து விட்டனர்.
ஸ்பாட் பிக்ஸிங்கில் ஈடுபட்டு ராஜஸ்தான் அணியைச் சேர்ந்த ஸ்ரீசாந்த், அஜீத் சண்டிலா, அங்கித் சவான் ஆகியோர் கைதாகி சிறையில்உள்ளனர் என்பது நினைவிருக்கலாம். இந்த வழக்கில் மொத்தமாக 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை ஹோட்டல் அதிபரும் அரசு சாட்சியாக மாறுகிறார்?:
இந் நிலையில் சென்னையைச் சேர்ந்த நட்சத்திர ஹோட்டல் அதிபர் விக்ரம் அகர்வாலுக்கும் ஐ.பி.எல். சூதாட்டத்தில் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்தது.
அவரிடம் மும்பை போலீசார் விசாரணையை முடித்து விட்டு அவரை திருப்பி அனுப்பி விட்டனர். இந் நிலையில் ஹோட்டல் அதிபர் விக்ரம் அகர்வால் கிண்டியில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் நாளை ஆஜராகிறார்.
அவரும் அரசு தரப்பு சாட்சியாக மாறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.