இந்தியாவுக்கு எந்த வெளிநாட்டு அணி வந்தாலும்- அதாவது தெற்காசியாவைச் சேராத - அவர்களுக்கு பெரும் அக்கப்போராக இருப்பது நம்ம ஊர் பிட்ச்சுகளும், சுழற்பந்து வீச்சாளர்களும்தான். எப்படி விளையாடினாலும் எப்படியாச்சும் அவுட்டாக்கி விடுவார்கள் நம்மவர்கள். காரணம், வசதிக்கேற்ப போடப்படும் பிட்ச்சுகள். ஆனால் அதை சமீபத்தில் இங்கிலாந்து அணி தவிடுபொடியாக்கி நமது கண்ணில் தவிட்டைத் தூவிவிட்டுப் போய் விட்டது.
இந்தியாவுக்குச் சாதகமாக போடப்பட்ட பிட்ச்சிலும் சிறப்பாக ஆடி வெற்றி பெற்றது. சாதகமில்லாத பிட்ச்சிலும் பின்னி எடுத்தது. இந்திய சுழற்பந்து வீச்சையும் அழகாக சமாளித்தது.
தற்போது ஆஸ்திரேலிய அணியும் அதே பாணியில் இந்தியாவை நிலை குலைய வைக்க திட்டமிட்டுள்ளதாம். ஆஸ்திரேலியாவின் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லியான்தான் இந்தியாவை சமாளிக்க களம் இறக்கப்படும் சுழற்பந்து சிங்கமாக முன்னிறுத்தப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் என்ன சொல்கிறார் என்றால், ஆஸ்திரேலிய அணியின் முக்கியத் துருப்புச் சீட்டாக நான் இருப்பேன் என்று கருதுகிறேன். இந்திய களங்கள் சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமானவை. எனவே எனக்கு அதிக வேலை இருக்கும் என்று நினைக்கிறேன்.
கூடவே சேவியர் டோஹர்த்தியும் இருக்கிறார். இருவரும் இணைந்து சரியான முறையில் பந்து வீச முடியும் என்ற நம்பி்க்கை உள்ளது என்றார்.
இந்தியா - இங்கிலாந்து தொடரின்போது இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர்கள் எப்படி சூழலை தங்களுக்குச் சாதகமாக திருப்பினார்கள் என்பதை ஸ்டடி செய்துள்ளதாகவும், அது தங்களுக்கு உதவும் என்றும் லியான் கூறினார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஸ்வான், மான்டி பனீசர் ஆகியோர் இந்தியாவில் மிகச் சிறப்பாக பந்து வீசினார்கள். அவர்களது உத்திகளை நாங்கள் பின்பற்றுவோம் என்றார்.
மொத்தத்தில் இந்தியா தலையில் மிளகாய் தடவ இன்னொரு அணி வந்து விட்டது. உஷாராகி விட்டால் நல்லது... அஸ்வின்தான் கை கொடுக்க வேண்டும்.