லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான பாட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் கலந்து கொண்டார். இதில் துவக்கம் முதல் சிறப்பாக ஆடிய சாய்னா, அரையிறுதி வரை முன்னேறினார். ஆனால் அரையிறுதி போட்யில் சீனா வீராங்கனையிடம் தோல்வியை தழுவினார்.
இந்த நிலையில் வெண்கலப்பதக்கம் பெறுவதற்கான போட்டியில் மற்றொரு சீன வீராங்கனை ஜின் வாங் உடன் மோதினார். இதில் காயமடைந்த சீன வீராங்கனை போட்டியில் இருந்து விலகினார். இதனால் இந்தியாவின் சாய்னா நேவால் வெண்கலப் பதக்கம் வென்றார்.
ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்று நாடு திரும்பிய சாய்னா நேவாலுக்கு, அவரது சொந்த ஊரான ஹைதராபாத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் ஒலிம்பிக் பதக்கம் வென்று நாடு திரும்பினால், பரிசாக கார் ஒன்றை அளிப்பதாக, விளையாட்டு அமைச்சர் சாமுண்டீஸ்வர்நாத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் நாடு திரும்பியுள்ள சாய்னா நேவாலுக்கு, பி.எம்.டபில்யூ சொகுசு கார் ஒன்றை பரிசாக வழங்க உள்ளதாக சாமுண்டீஸ்ர்நாத் தெரிவித்துள்ளார். பரிசு காரின் சாவியை சாய்னா நேவாலுக்கு பிடித்த இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் வழங்க உள்ளார்.
இது குறித்து சாமுண்டீஸ்வர்நாத் கூறியதாவது,
லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு செல்லும் முன்பே, சாய்னா நேவாலை சந்தித்து பேசினேன். அப்போது ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று நாடு திரும்பினால், கார் ஒன்றை பரிசு வழங்குவதாக, அவருக்கு உறுதி அளித்திருந்தேன்.
தற்போது ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்று நாடு திரும்பியுள்ளார் சாய்னா நேவால். எனவே நான் கூறியது போல, அவருக்கு பி.எம்.டபில்யூ கார் ஒன்றை பரிசாக வழங்க உள்ளேன்.
சாய்னா நேவாலை சந்தித்து பேசும் போதெல்லாம், என்னிடம் சச்சினை குறித்து கேட்பார். மேலும் தான் ஒரு சச்சினின் தீவிர ரசிகை என்று கூறுவார். எனவே பரிசு காரை சச்சினே வழங்கினால் நன்றாக இருக்கும் என்று கருதினேன். சச்சினிடம் பரிசு வாங்குவதை நினைத்து சாய்னா நேவால் மகிழ்ச்சி அடைவார் என்று நம்புகிறேன் என்றார்.
இது குறித்து சச்சினின் ரசிகையான சாய்னா நேவால் கூறியதாவது, கிரிக்கெட் வீரர் சச்சினிடம் இருந்து பரிசு காரை பெற உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.