மெல்போர்ன்: சச்சின் டெண்டுல்கர் ஒரு பொய் சொல்லி. மிகவும் மோசமான ஆட்டக்காரர் என்று ஆஸ்திரேலிய முன்னாள் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் ஆடம் கில்கிறைஸ்ட் கூறியுள்ளது பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. உலகின் எந்த கிரிக்கெட் வீரரையும் முழு மனதோடு அங்கீகரிக்காதவர்கள் ஆஸ்திரேலிய வீரர்கள் என்பது உலகறிந்த உண்மை. தங்களை விட சிறந்த முறையில் விளையாடும் பிற நாட்டு அணியினரை மட்டம் தட்டுவதும், தங்கள் நாட்டுக்கு அவர்கள் விளையாட வரும்போது முடிந்தவரை கேவலப்படுத்தி அனுப்பி வைப்பதும் அவர்களது கிரிக்கெட் ஆட்டத்தின் ஒரு பகுதி. கடந்த கால வரலாறுகள் இதை மெய்ப்பித்துள்ளன. இந்த நிலையில் உலகின் தலை சிறந்த வீரர்கள் அனைவராலும் புகழப்படும், இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் இந்திய கிரிக்கெட்டின் கடவுள் என புகழப்படும் சச்சின் டெண்டுல்கரை மிகக் கேவலமாக விமர்சித்துள்ளார் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் கில்கிறைஸ்ட். கேப்டன் பதவிக்காக காத்துக் காத்து வெறுப்படைந்து கடைசியில் கிரிக்கெட்டை விட்டு ஓய்வு பெற்றவர் கில்கிறைஸ்ட் (ஆஸ்திரேலியாவிலும் உள்ளடி வேலைகள் ரொம்பப் பாப்புலர்). இவர் தற்போது ட்ரூ கலர்ஸ் இன் குட் வீக் என்ட் என்ற பெயரில் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார் (இவரது நூலின் பெயரே ஆஸ்திரேலிய வீரர்களின் உண்மை நிறத்தையும் வெளிப்படுத்துவதாக உள்ளது பொருத்தமான உண்மை). இந்த நூலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சிட்னி டெஸ்ட் போட்டி விவகாரம் குறித்து விலாவாரியாக விவரித்துள்ளார் கில்கிறைஸ்ட். அப்படியே சச்சினையும் வில்லங்கமாக விமர்சித்துள்ளார். கில்கிறைஸ்ட் அதில் கூறியுள்ளதாவது ... சச்சின் டெண்டுல்கர் மைதானத்தில்ஆட்டத்தின்போது நடப்பவற்றை மறைப்பதில் கை தேர்ந்தவராகி விட்டார். கூடவே எதிர் அணியினரையும் அவர் மட்டம் தட்டி விடுகிறார். ஆஸ்திரேலியர்களின் மனப்பான்மை, கடுமையாக போராடுவது, முடிந்தவரை சிறப்பாக விளையாடுவது என்பதுதான். அதேசமயம், எதிரணியினரை நாங்கள் ஒருபோதும் குறைத்து மதிப்பிடுவதில்லை. அவர்கள் சிறப்பாக விளையாடினால் கை குலுக்க தவறுவதில்லை. ஆனால் சில எதிரணியினர் இதை செய்வதில்லை. குறிப்பாக சச்சின் டெண்டுல்கர். இந்தியாவை நாங்கள் வெற்றி கொண்ட பின்னர் அவர் எங்களுடன் கை குலுக்கக் கூட தயங்குவார். இந்த ஆண்டு தொடக்கத்தில் சிட்னியில் நடந்த டெஸ்ட் போட்டியின்போது ஹர்பஜன்சிங் மீதான இனவெறி சர்ச்சையின்போது, நடந்த விசாரணையில் சச்சின் ெடண்டுல்கர் கொடுத்த சாட்சியம் கேலிக்குரியது. முதலில் ஹர்பஜன் சிங் என்ன சொன்னார் என்று தனக்குத் தெரியாது என்றார் சச்சின். நானும் சச்சின் உண்மைதான் பேசுகிறார் என்றே நினைத்தேன். பின்னர், அப்பீல் விசாரணையின்போது ஆண்ட்ரூ சைமண்ட்ஸை ஹர்பஜன் சிங் குரங்கு என்று சொல்லவில்லை. ஹர்பஜன் சிங் சொன்ன இந்தி வார்த்தையை, மங்கி என்ற பொருள்பட சைமண்ட்ஸ் எடுத்துக்கொண்டிருக்கலாம் என்றார் சச்சின். இதன் மூலம் சச்சின் ஒரு பொய் சொல்லியாக உருவெடுத்துள்ளார். அவர் ஒரு நல்ல விளையாட்டுக்காரர் இல்லை என்று எழுதித் தள்ளியுள்ளார் கில்கிறைஸ்ட். இவ்வளவு பேசியுள்ள கில்கிறைஸ்ட், சிட்னி போட்டியில் ஆஸ்திரேலியா வென்றபோது, சச்சினுக்கும், டிராவிடுக்கும் கை கொடுக்க மறுத்து விட்டுப் போனவர் என்பது நினைவிருக்கலாம். கில்கிறைஸ்ட் ஐபிஎல் டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் கேப்டனாக இருக்கிறார். இவருக்கு ஐபிஎல் ஆண்டுக்கு ரூ. 2.8 கோடி சம்பளத்தையும் கொட்டிக் கொடுக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியத்தையும் போகிற போக்கில் கடுமையாக வாரியுள்ளார் கில்கிறைஸ்ட். இந்திய கிரிக்கெட் வாரியம் மோசமான அரசியலை கையாளுகிறது. விளையாட்டை தங்களது இஷ்டத்திற்குப் பயன்படுத்துகிறது. மிகவும் மோசமாக நடத்துகிறது என்று விளாசியுள்ளார். சொல்வதற்கு ஒன்றுமில்லை - சச்சின் கில்கிறைஸ்ட்டின் இந்த விமர்சனம் குறித்து சொல்வதற்கு ஒன்றும் இல்ைல என்று சச்சின் கருத்து ெதரிவித்துள்ளார். கில்கிறைஸ்ட்டின் விமர்சனம் குறித்து தான் பதில் ஏதும் பேசப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதேசமயம், முன்னாள் இந்திய கேப்டனும், முன்னாள் தேர்வுக் குழுத் தலைவருமான திலீப் வெங் சர்க்கார் கில்கிறைஸ்ட்டை கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், தனது புத்தகம் குறித்த விறுவிறுப்பை அதிகரிக்க இவ்வாறு எழுதியுள்ளார் கில்கிறைஸ்ட். இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. ஆஸ்திரேலியாவிலும், இங்கிலாந்திலும், நீங்கள் ஒரு புத்தகம் எழுதினால், உங்களுக்கு நிறையப் பணம் கிடைக்கும். ஆனால் அதில் பரபரப்பும், விறுவிறுப்பும் நிறைந்திருக்க வேண்டும். அதுதான் மார்க்கெட்டிங் உத்தி. அது உண்மையாக இருக்குமானால், சச்சின் குறித்து கில்லி கூறியிருப்பது துரதிர்ஷ்டவசமானது. எனக்கும் 1987ம் ஆண்டு இப்படி ஒரு அனுபவம் நேர்ந்தது. தனது சுயசரிதையில் மேற்கிந்திய தீவுகள் வீரர் மால்கம் மார்ஷல் இதேபோல காரசாரமாக கூறியிருந்தார். ஆனால் உண்மையில் அப்படி எதுவும் நடக்கவில்லை என்று கூறியுள்ளார் வெங்சர்க்கார். நான் சொன்னது வேறு: கில்லி பல்டி: இந் நிலையில் சச்சின் டெண்டுல்கர் குறித்து நான் கூறியதை மீடியாக்கள் திரித்துக் கூறி விட்டதாக பல்டி அடித்துள்ளார் கில்கிறைஸ்ட். இதுகுறித்து கில்கிறைஸ்ட் வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில், நான் சொன்னது வேறு. மீடியாக்கள் பிரசுரித்துள்ளது வேறு. தேவையில்லாமல் ஒன்றுமில்லாததை ஊதி விட்டு விட்டனர். சிட்னி டெஸ்ட் சம்பவங்கள் குறித்து நான்கு பக்கங்களில் நான் எழுதியுள்ளேன். ஆனால் அதை முழுமையாக கூறாமல் நான் கூறிய இரண்டு வாக்கியங்களை மட்டும் பெரிதாக்கி விட்டனர். சனிக்கிழமை வெளியாகவுள்ள கட்டுரையில் எனது நிலை குறித்து நான் விளக்கிக் கூறவுள்ளேன் என்று கில்கிறைஸ்ட் கூறியுள்ளார். இதற்கிடையே, சச்சின் டெண்டுல்கரை போன் மூலம் தொடர்பு கொண்டும் கில்கிறைஸ்ட் பேசியதாக கூறப்படுகிறது.