கேரளா அணியில் ஸ்ரீசாந்த்
அதை உறுதிப்படுத்தும் வகையில் கேரளா மாநில ரஞ்சி ட்ராபி தொடருக்கான உத்தேச அணியில் ஸ்ரீசாந்த் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. சுமார் 7 ஆண்டுகள் கழித்து ஸ்ரீசாந்த் கிரிக்கெட் களத்தில் விளையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேட்ச் பிக்ஸிங் புகாரில் கைது
கடந்த 2013 மே மாதம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கித் சவான் மற்றும் அஜித் சண்டிலியா ஆகியோரை மேட்ச் பிக்ஸிங் புகாரில் கைது செய்தனர். அப்போது பிசிசிஐ ஸ்ரீசாந்த்தை வாழ்நாள் முழுவதும் கிரிக்கெட் ஆட தடை விதித்தது.
வழக்கு தொடர்ந்தார்
பின்னர் அவர் நீதிமன்றத்தில் தன் மீதான மேட்ச் பிக்ஸிங் புகார் மற்றும் வாழ்நாள் தடையை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார். 2015இல் டெல்லி சிறப்பு நீதிமன்றம் அவரை அனைத்து குற்றச்சாட்டில் இருந்தும் விடுவித்தது. ஆனாலும், பிசிசிஐ வாழ்நாள் தடையை தொடர்ந்தது.
நீதிமன்ற போராட்டம்
2018இல் கேரளா உயர் நீதிமன்றம் அவருடைய வாழ்நாள் தடையை ரத்து செய்ய உத்தரவிட்டது. ஆனால், பிசிசிஐ உச்ச நீதிமன்றம் சென்றது. அங்கே ஸ்ரீசாந்த் மீதான குற்றச்சாட்டை நீக்காமல், அவருடைய வாழ்நாள் தடையை குறைக்குமாறு பிசிசிஐக்கு உத்தரவிடப்பட்டது.
முடிவுக்கு வரும் தடை
அதை அடுத்து அவருக்கு ஏழு ஆண்டுகள் தடை விதிக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது. இந்த நிலையில், அவரது தடை செப்டம்பர் 2020 அன்று முடிவுக்கு வருகிறது. இந்த நிலையில் கேரளா மாநில ரஞ்சி ட்ராபி உத்தேச அணியில் ஸ்ரீசாந்த் பெயர் இடம் பெற்றுள்ளது.
மகிழ்ச்சி
தான் உடற்தகுதியை நிரூபித்து கேரளா அணியில் இடம் பெறுவேன் என்றும், சர்ச்சைகளுக்கு ஓய்வு கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் ஸ்ரீசாந்த் தன்னை அணியில் சேர்த்ததை பற்றி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ஸ்ரீசாந்த் அனுபவம் தங்களுக்கு உதவும் என்று கேரளா அணி நிர்வாகமும் கூறி உள்ளது.
நீண்ட காலம் ஆடிய ஸ்ரீசாந்த்
ஸ்ரீசாந்த் 2011 உலகக்கோப்பை வென்ற அணியில் இடம் பெற்றவர். 27 டெஸ்ட் போட்டிகளில் 87 விக்கெட்கள் வீழ்த்தி உள்ளார். ஒருநாள் போட்டிகளில் 75 விக்கெட் வீழ்த்தி உள்ளார். கேரளா மாநிலத்தில் இருந்து இந்திய அணியில் இடம்பெற்று பல ஆண்டுகள் கிரிக்கெட் ஆடிய ஒரே வீரர் ஸ்ரீசாந்த் மட்டுமே.