கொச்சின் : வேகப் பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் கிரிக்கெட் ஆட விதிக்கப்பட்ட தடையை போராடி வென்று எட்டு ஆண்டுகளுக்கு பின் மீண்டும் கிரிக்கெட் ஆடத் துவங்கி இருக்கிறார்.
கேரளா மாநில உத்தேச அணியில் இடம் பெற்றுள்ள ஸ்ரீசாந்த் பயிற்சிப் போட்டியில் பங்கேற்றார்.
அதில் தன் இளம் வயதில் எப்படி எதிரணி வீரர்களை சீண்டினாரோ, அதே போல சீண்டத் துவங்கினார்.
ஸ்ரீசாந்த் 2013ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் மேட்ச் பிக்ஸிங் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு பிசிசிஐயால் கிரிக்கெட் ஆட வாழ்நாள் தடை விதிக்கப்பட்டு இருந்தார். பின் நீதிமன்றத்தில் போராடி அந்த தடையை குறைத்து, தற்போது மீண்டும் கிரிக்கெட் ஆடத் துவங்கி உள்ளார்.
கேரளா மாநில அணியில் உத்தேச வீரராக அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அந்த அணி வீரர்களுடன் பயிற்சி செய்து வந்த அவர் சமீபத்தில் சையது முஷ்டாக் அலி தொடருக்கு முன்னதாக நடந்த பயற்சிப் போட்டியில் பங்கேற்றார்.
அந்த பயிற்சிப் போட்டியில் அவர் முன்பைப் போலவே அதே முழு வேகத்தில் பந்து வீசினார். மேலும், ஆக்ரோஷமாக காணப்பட்டார். எதிரணி பேட்ஸ்மேன்களை சீண்டியபடியே அவர் பந்து வீசினார். விக்கெட் எடுத்த உடன் ஒரு வீரரை திட்டினார்.
எட்டு ஆண்டுகளுக்கு பின் வந்தாலும் அவர் ஒரு அங்குலம் கூட மாறாமல் பழைய ஸ்ரீசாந்த் ஆகவே களத்தில் நடந்து கொண்டார். இந்த வீடியோவை கேரள மாநில கிரிக்கெட் அமைப்பு இணையத்தில் வெளியிட்டுள்ளது. ஸ்ரீசாந்த் கேரளா அணியில் இடம் பெறுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.