இனவெறி சர்ச்சை
2008ஆம் ஆண்டு ஹர்பஜன் சிங்கிற்கு அத்தனை சிறப்பான ஆண்டாக அமையவில்லை. அந்த ஆண்டு நடந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் போது ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் உடன் ஏற்பட்ட வார்த்தை மோதலில் இனவெறி சர்ச்சை வெடித்தது.
ஐபிஎல் சர்ச்சை
அதில் இருந்து மீண்ட ஹர்பஜன் சிங், அதே ஆண்டில் ஐபிஎல் தொடரில் ஸ்ரீசாந்த் கன்னத்தில் அறைந்து அதனாலும் சர்ச்சையில் சிக்கினார். 2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் துவங்கி நடந்து வந்தது. ஹர்பஜன் சிங் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்று இருந்தார்.
பஞ்சாப் - மும்பை போட்டி
ஸ்ரீசாந்த் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இடம் பெற்று இருந்தார். மொஹாலியில் பஞ்சாப் - மும்பை இடையே ஆன லீக் போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் பஞ்சாப் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது.
கொண்டாட்டங்களில் ஈடுபடுவார்
ஸ்ரீசாந்த் அப்போது விக்கெட் எடுத்தாலும், வெற்றி பெற்றாலும் அதிக கொண்டாட்டங்களில் ஈடுபடுவார். அந்தப் போட்டியின் வெற்றியை அடுத்து அதே போல அதிகமாக கொண்டாட்ட மனநிலையில் இருந்தார். போட்டி முடிந்து இரு அணி வீரர்களும் கை குலுக்கி வந்தனர்.
ஸ்ரீசாந்த் கண்ணீர்
அப்போது ஸ்ரீசாந்த், ஹர்பஜன் சிங்கிடம் ஏதோ கூறினார். கோபத்தில் ஹர்பஜன் சிங்,ஸ்ரீசாந்த் கன்னத்தில் அறைந்தார். அத்துடன் இந்த சம்பவம் முடியவில்லை. ஸ்ரீசாந்த் கண்ணீர் விட்டு அழுத காட்சிகளும் அரங்கேறியது. அப்போது அது பரபரப்பான வியமாக மாறியது.
அதிகாரிகள் விசாரணை
ஊடகங்களில் இது குறித்து பரபரப்பாக பேசப்பட்டதை அடுத்து, ஐபிஎல் அதிகாரிகள் விசாரணை செய்தனர். அது பற்றி தற்போது ஸ்ரீசாந்த் மனம் திறந்துள்ளார். ஸ்ரீசாந்த் என்ன சொன்னார்? பின் யார் சமாதானம் செய்தது? என பல தகவல்களை கூறி உள்ளார்.
என்ன சொன்னார் ஸ்ரீசாந்த்?
தான் போட்டி முடிந்த உடன் கை குலுக்கும் போது ஹர்பஜன் சிங்கிடம், "பஞ்சாப், பம்பாயை வெல்லும்.. பஞ்சாப், பம்பாயை வெல்லும்.." எனக் கூறியதாக தெரிவித்தார். அப்போது தான் கோபம் கொண்டு ஹர்பஜன் அறைந்துள்ளார்.
சமாதானம் செய்த சச்சின்
பின்னர் அன்றைய தினம் இரவு சச்சின் டெண்டுல்கர் தன்னிடம் பேசியதாகவும், நீங்கள் இருவரும் ஒரே அணியில் ஆடுபவர்கள் எனக் கூறி சமாதானம் செய்ததாகவும் கூறினார் ஸ்ரீசாந்த். பின் அன்றைய இரவே தாங்கள் இருவரும் சந்தித்து சேர்ந்து உணவு உட்கொண்டதாக கூறினார்.
எதுவும் செய்து விட வேண்டாம்
எனினும், பிசிசிஐ இந்த விவகாரம் குறித்து விசாரணை செய்தது. விசாரிக்க வந்த சுதிந்த்ரா நானாவதி என்ற அதிகாரியிடம் தான் ஹர்பஜன் சிங்கை தடை அல்லது வேறு எதுவும் செய்து விட வேண்டாம் என அழுது, கெஞ்சியதாகவும் கூறினார் ஸ்ரீசாந்த்.
எந்த பிரச்சனையும் இல்லை
தற்போது ஹர்பஜன் சிங்குடன் தனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும், அவர் மூத்த சகோதரர் போன்றவர் என்றும் கூறினார் ஸ்ரீசாந்த். ஹர்பஜன் சிங்கும் பல பேட்டிகளில் இந்த சம்பவம் பெரிதாக்கப்பட்டது குறித்தும், தங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் கூறி உள்ளது குறிப்பிடத்தக்கது.