வெற்றிக் கணக்கை துவக்கிய எஸ்ஆர்எச்
சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கிடையில் நேற்று நடைபெற்ற ஐபிஎல்லின் 11வது போட்டியில் 15 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் அந்த அணி தன்னுடைய வெற்றிக் கணக்கை துவக்கியுள்ளது.
முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்திய ரஷீத்
இந்த போட்டியில் 4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை 14 ரன்கள் மட்டுமே கொடுத்து வீழ்த்திய ரஷீத் கான் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் டெல்லி கேபிடல்ஸ் அணியின் முக்கிய விக்கெட்டுகளான ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரிஷப் பந்த் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
தாயை நினைவுகூர்ந்த ரஷீத்
டெல்லி கேபிடல்ஸ் அணி இந்த தொடரில் பெற்றுள்ள முதல் தோல்வி இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் போட்டிக்கு பின்பு செய்தியாளர்களிடம் பேசிய ரஷீத் கான், கடந்த ஜூன் மாதத்தில் மறைந்த தன்னுடைய தாயை உருக்கத்துடன் நினைவு கூர்ந்தார்.
தாய் மிஸ் செய்யும் ரஷீத்
இந்த ஆண்டில் அடுத்தடுத்து தன்னுடைய தந்தை மற்றும் தாயை இழந்ததை நினைவு கூர்ந்த ரஷீத் கான், தன்னுடைய மிகப்பெரிய ஃபேன் தன்னுடைய தாய் என்றும் குறிப்பாக ஐபிஎல்லில் தான் விளையாடுவதை அவர் மிகவும் பாராட்டுவார் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆட்டநாயகன் விருது வாங்கும் இந்த வேளையில் தன்னுடைய தாயை தான் மிஸ் செய்வதாகவும் கூறியுள்ளார்.