சென்னையிடம் தோல்வி
முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் மரண அடி வாங்கி ஐபிஎல் தொடரை துவக்கி வைத்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர். வெறும் 70 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அந்தப் போட்டியில் தோல்வி அடைந்தது பெங்களூர்.
மீண்டும் தோல்வி
அடுத்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 188 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய பெங்களூர் அணி 181 ரன்களை மட்டுமே எட்டியது. ஏபி டி வில்லியர்ஸ் களத்தில் இருந்தும் அந்த அணியால் வெற்றி இலக்கை எட்ட முடியவில்லை. ஆறு ரன் வித்தியாசத்தில் பெங்களூர் அணி தோல்வி அடைந்தது.
கோலியின் கோபம்
அந்தப் போட்டியில் கடைசி பந்தை மும்பை அணி வீரர் மலிங்கா நோ பாலாக வீசினார். ஆனால், அதை அம்பயர் கண்டு கொள்ளாததால் கேப்டன் கோலி கடும் கோபம் கொண்டார். அப்போது அம்பயரை விமர்சித்த கோலி, "இது ஐபிஎல் கிரிக்கெட். கிளப் கிரிக்கெட் அல்ல" என கடுமையாக சாடினார்.
மீண்டும் மரண அடி
அப்படி பேசிய கோலியின் பெங்களூர் அணி அடுத்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் மீண்டும் மரண அடி வாங்கியது. இந்த முறை பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் மோசமாக செயல்பட்டது பெங்களூர்.
கோலி, டி வில்லியர்ஸ் ஏமாற்றம்
ஹைதராபாத் அணி 231 ரன்கள் குவித்தது. பதிலுக்கு பெங்களூர் அணி 113 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து பரிதாபமாக 118 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியில் உலகின் முன்னணி பேட்ஸ்மேன்கள் கோலி 3 ரன்னும், டி வில்லியர்ஸ் 1 ரன்னும் எடுத்து ஏமாற்றினர்.
கிளப் கிரிக்கெட் மாதிரி..
இப்போது கோலி வசை பாடிய அம்பயர், கோலியை பார்த்து, "பெங்களூர் டீம்! இது ஐபிஎல் கிரிக்கெட்.. இப்படி கிளப் கிரிக்கெட் மாதிரி ஆடுறீங்களே" என கேள்வி கேட்டால் கோலி என்ன செய்வார் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
கேப்டன்சி சரியில்லை
இனி வரும் போட்டிகளில் பெங்களூர் அணி வெற்றி பெறவில்லை என்றால் கோலியின் கேப்டன்சி அதற்கு காரணம் என அனைவரும் பேசுவதை யாராலும் தடுக்க முடியாது.