சர்வதேச பயணிகளுக்கு அனுமதி
இலங்கையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் 2,800 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 பேர் உயிரிழந்துள்ளனர். ஊரடங்கு, குவாரன்டைன் விதிமுறைகள் தொடர்ந்து அங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வரும் 1ம் தேதி முதல் சர்வதேச விமானநிலையங்களை மீண்டும் செயல்படுத்தவும் வெளிநாட்டு பயணிகளை அனுமதிக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
இலங்கை விருப்பம்
கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இங்கிலாந்துடன் இலங்கை மோதவிருந்த 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ரத்து செய்யப்பட்டது. இதேபோல, தென்னாப்பிரிக்கா, வங்க தேசமும் இலங்கையுடனான தங்களது தொடர்களை ரத்து செய்தன. இந்நிலையில், இந்தியாவின் ஐபிஎல் போட்டிகளை நடத்த இலங்கை விருப்பம் தெரிவித்திருந்தது.
70 சர்வதேச வீரர்கள் பங்கேற்பு
ஆனால் ஐபிஎல் 2020 தொடரை யூஏஇயில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டு அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் இலங்கையின் எல்பிஎல் தொடரை வரும் ஆகஸ்ட் 28ம் தேதி முதல் செப்டம்பர் 20ம் தேதிவரை நடத்தவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. மொத்தம் 23 போட்டிகளை கொண்ட இந்த தொடரில் 70 சர்வதேச வீரர்களும், 10 பயிற்சியாளர்களும் பங்கேற்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
தேசிய வீரர்கள் பங்கேற்பு
வெளிநாட்டு வீரர்களின் பெயர்கள் அறிவிக்கப்படவில்லை. 5 அணிகள் பங்கேற்கவுள்ள இந்த தொடரில் இலங்கையின் தேசிய வீரர்களும் பங்கேற்க உள்ளனர். இந்த தொடரில் மோதவுள்ள வீரர்கள் முதலில் சுகாதார அதிகாரிகளால் 2 வாரங்களுக்கு குவாரன்டைன் செய்யப்பட்டு பின்னர், தங்களை தாங்களே இரண்டு வாரங்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்வதே தற்போது நடைமுறையில் உள்ள பாதுகாப்பு வழிமுறையாகும்.