இலங்கை தொடர்
இந்த அணிக்கு ஷிகர் தவான் கேப்டனாகவும், பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் செயல்படவுள்ளார். இதில் இளம் வீரர்கள் தேவ்தத் படிக்கல், ருத்ராஜ் கெயிக்வாட், நிதிஷ் ராணா, கிருஷ்ணப்பா கவுதம், சேட்டன் சக்காரியா, வருண் சக்கரவர்த்தி ஆகியோருக்கு தங்களது முதல் சர்வதேச போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்திய அணி தயார்
இலங்கை தொடருக்காக கடந்த மாதம் மும்பையில் 14 நாட்கள் பயோ பபுளில் இருந்த இந்திய வீரர்கள் ஜூன் 28ம் தேதியன்று இலங்கைக்கு புறப்பட்டு சென்றனர். அங்குள்ள தனியார் ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டு தற்போது முதற்கட்ட பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எதிர்ப்பு
இந்த தொடருக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்ற சூழலில், இலங்கை முன்னாள் வீரர் அர்ஜுனா ரணதுங்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், இந்தியாவின் 'ஏ' இலங்கை அணிக்கு எதிராக விளையாட வந்திருப்பது எங்கள் நாட்டின் கிரிக்கெட்டிற்கு அவமானம். இந்த தொடருக்கு ஒப்புக்கொண்ட இலங்கை கிரிக்கெட் வாரியத்துக்கு கண்டனம் தெரிவிக்கின்றேன். இந்தியா தனது முதல் அணியை இங்கிலாந்துக்கு அனுப்பிவிட்டு, பலவீனமான 'ஏ' அணியை சுற்றுப்பயணம் அனுப்பியுள்ளது. இது கொஞ்சம் கூட சரியில்லை எனத்தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ரணதுங்காவின் குற்றச்சாட்டுக்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் பதிலடி கொடுத்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், இலங்கை வாரியம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்ததை அறிந்தோம். இந்தியாவின் 2ம் தரம் அணி ஒன்றும் இலங்கைக்கு வரவில்லை, சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள 20 பேர் கொண்ட அணியில், 14 வீரர்கள் ஏற்கனவே இந்தியாவுக்காக சில போட்டிகளில் விளையாடியவர்கள். 6 வீரர்கள் மட்டுமே புதுமுகங்கள். எனவே இந்தியாவின் முதல் தர அணியுடன் தான் இலங்கை மோதுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சொதப்பல்
இலங்கை அணி தற்போது தான் இங்கிலாந்துக்கு எதிராக மோசமான தோல்வியை சந்தித்தது. கடைசியாக விளையாடிய 5 டி20 தொடர்களிலும் தோல்விகளை சந்தித்து ரசிகர்களின் படு மோசமான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. இதனால் இந்தியாவின் ஏ அணி கூட இலங்கையை வீழ்த்த வாய்ப்பு உள்ளதாக கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.