இலங்கை பேட்டிங்
இலங்கையில் நடந்து வரும் டி20 தொடரின் இரண்டாவது போட்டியில் இலங்கை - நியூசிலாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்து 161 ரன்கள் குவித்தது. அடுத்து நியூசிலாந்து அணி பேட்டிங் செய்தது.
கடைசி ஓவர் பரபரப்பு
இலங்கை அணி பந்துவீச்சில் நியூசிலாந்து அணி மதில் மேல் பூனையாக கடைசி ஓவர் வரை போட்டியை எடுத்துச் சென்றது. கடைசி ஓவரில் 7 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை.
டி சில்வா பந்துவீச்சு
கடைசி ஓவரை டி சில்வா வீசினார். முதல் பந்தில் ப்ரூஸ் ரன் அவுட் ஆனார். இரண்டாம் பந்தில் மிட்செல் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 4 பந்துகளில் 7 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலைக்கு சென்றது நியூசிலாந்து.
அந்த மோதல்
மூன்றாம் பந்தை சந்தித்த சான்ட்னர் பந்தை பவுண்டரியை நோக்கி உயரே அடித்தார். பந்தை கேட்ச் பிடிக்க ஓடிய சினேகன் ஜெயசூர்யா அதில் வெற்றி கண்டார். அவர் கேட்ச் பிடித்து விட்டார் என எண்ணிய அடுத்த கணத்தில், குசால் மென்டிஸ் அவர் மீது கடுமையாக மோதினார்.
என்ன நடந்தது?
பந்தை கேட்ச் பிடிக்க குசால் மென்டிஸ்-உம் ஓடி வந்துள்ளார். ஜெயசூர்யா பந்தை கேட்ச் பிடித்ததை எதிர்பார்க்காத மென்டிஸ் அவர் மீது மோதினார். அதனால், பவுண்டரி எல்லையை தாண்டி விழுந்தார் ஜெயசூர்யா. அந்த பந்து சிக்ஸ் சென்றதாக எடுத்துக் கொள்ளப்பட்டது.
நியூசிலாந்து வெற்றி
தொடர்ந்து மூன்றாவது விக்கெட்டை இழக்க வேண்டிய நியூசிலாந்து அணி, இவர்கள் செய்த காரியத்தால் ஆறு ரன்கள் பெற்று ஸ்கோரை சமன் செய்தது. நான்காவது பந்தில் ஒரு ஃபோர் அடித்த சான்ட்னர், நியூசிலாந்து அணியை வெற்றி பெற வைத்தார்.
மருத்துவக் குழு பரிசோதனை
கடுமையாக மோதிக் கொண்டதால் குசால் மென்டிஸ் - ஜெயசூர்யா இருவரையும் மருத்துவக் குழு பரிசோதனை செய்து முதல் உதவி அளித்தது. போட்டி முடிந்த உடன் பேசிய மலிங்கா அவர்கள் இருவரும் நன்றாக இருப்பதாக தெரிவித்தார்.
முதல் முறை அல்ல
மென்டிஸ் - ஜெயசூர்யா கீழே விழுந்து வாருவது முதல் முறை அல்ல. கடந்த மாதம் தான் இருவரும் பைக் சாகசம் செய்து கீழே விழுந்து வாரினார்கள். தொடர்ந்து இந்த மாதமும் கீழே விழுந்து வாரியதை அடுத்து உச்சுக் கொட்டி சிரித்து வருகிறார்கள் கிரிக்கெட் ரசிகர்கள். அந்த பைக் சம்பவம் என்னாது.. என்று கேட்கிறீர்களா?
மோட்டார் பைக்
கடந்த மாதம் வங்கதேச அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இலங்கை அணி கைப்பற்றியது. அந்த தொடரின் வெற்றியை ஒட்டி இலங்கை அணிக்கு மோட்டார் பைக் பரிசளிக்கப்பட்டது.
விழுந்து வாரினார்கள்
குசால் மென்டிஸ் பைக்கை ஓட்ட ஆசைப்பட்டார். பின் இருக்கையில், ஜெயசூர்யா அமர்ந்தார். திடீரென பைக் கட்டுப்பாட்டை இழந்த மென்டிஸ், ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன் நடு மைதானத்தில் விழுந்து வாரினார். பின்னே அமர்ந்த பாவத்திற்கு ஜெயசூர்யாவும் கீழே விழுந்தார். மீண்டும் ஒருமுறை தற்போது டி20 போட்டியில் மோதிக் கொண்டு வெற்றியை கோட்டை விட்டுள்ளனர்.