கிரிக்கெட் தொடர் நடக்குமா?
முன்னதாக இலங்கை அணி, பாகிஸ்தான் சென்று ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் பங்கேற்கும் என தொடரை திட்டமிட்டன இரு நாடு கிரிக்கெட் போர்டுகள். ஆனால், இந்த தொடர் பாதுகாப்பு காரணங்கள் மற்றும் பத்து ஆண்டுக்கு முன் நடந்த தீவிரவாத தாக்குதலின் அதிர்வு இன்னும் நீங்காத காரணத்தால் தொடர் நடக்குமா? என்பதே கேள்விக் குறியாக இருந்தது.
முக்கிய வீரர்கள் முடிவு
இலங்கை கிரிக்கெட் போர்டு நடத்திய வீரர்கள் கூட்டத்தில் முக்கிய வீரர்கள் உட்பட பத்து இலங்கை வீரர்கள் தங்களால் பாகிஸ்தான் செல்ல முடியாது என மறுத்து விட்டனர். அதுவும் சர்ச்சை ஆனது.
பாகிஸ்தான் உறுதி
இதனிடையே, பாகிஸ்தான் நாடு இலங்கை வீரர்களுக்கு உச்சகட்ட பாதுகாப்பு வழங்கப்படும் என உத்தரவாதம் அளித்ததன் பேரில் இலங்கை கிரிக்கெட் போர்டு தொடரில் விளையாட சம்மதம் அளித்தது.
பாதுகாப்பு ஏற்பாடுகள்
இலங்கை வீரர்கள் பாகிஸ்தானில் காலடி எடுத்து வைத்தது முதல் பெரும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. பலரும் அதை கேலி, கிண்டல் கூட செய்தனர். அந்த அளவுக்கு இலங்கை வீரர்களை சுற்றி வளைத்து பாதுகாப்பு அளித்தனர்.
இலங்கை வெற்றி
இதனிடையே ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் அணி 2 - 0 என வெற்றி பெற்றது. டி20 தொடரில் இலங்கை அணி 3 - 0 என வெற்றி பெற்றது. அது இலங்கை அணிக்கு மகிழ்ச்சி தான் என்றாலும், தொடர் முடிந்த உடன் அடித்து, பிடித்து நாட்டுக்கு கிளம்பி உள்ளனர்.
இலங்கை வீரர்கள் நிலை
அதற்கு காரணம், பாகிஸ்தானில் நடந்த கொடுமை தான். தீவிரவாதிகளிடம் தப்பிக்க நினைத்து இராணுவத்திடம் சிக்கிக் கொண்டது இலங்கை அணி. பாதுகாப்புக்கான இராணுவ கெடுபிடிகள் ரொம்பவே "வலுவாக" இருந்துள்ளது.
இராணுவத்துக்கு நடுவே..
இலங்கை வீரர்கள் தங்கள் அறையில் இருந்து சில கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மைதானம் செல்ல வேண்டும் என்றால் சுமார் மூன்று - நான்கு மணி நேரம் ஆகும். காரணம், அனைத்து ரோடுகளையும் அடைத்து போக்குவரத்தை நிறுத்த வேண்டும் அல்லவா?
அறையா? இல்லை சிறையா?
அது கூடப் பரவாயில்லை. இலங்கை வீரர்கள் மைதானத்தில் இருந்து, ஹோட்டல். ஹோட்டலை விட்டால் மைதானம் என இருந்துள்ளனர். பாதுகாப்பு காரணங்களால் மருந்துக்கும் கூட வெளி உலகை பார்க்க அவர்கள் அனுமதிக்கப்படவில்லை.
இலங்கை கிரிக்கெட் போர்டு கோபம்
தாங்கள் அனுபவித்தவற்றை இலங்கை வீரர்கள் தங்கள் கிரிக்கெட் போர்டிடம் கூறி இருப்பதாக தெரிகிறது. இலங்கை கிரிக்கெட் தலைவர் ஷம்மி சில்வா, இந்த குறைகளை சுட்டிக் காட்டி பொங்கி இருக்கிறார்.
டெஸ்ட் தொடர் நடக்குமா?
இலங்கை அணி அடுத்து டிசம்பர் மாதம் நடைபெறும் டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. ஆனால், தற்போது இலங்கை கிரிக்கெட் போர்டு அதை மறு பரிசீலனை செய்ய உள்ளது. டெஸ்ட் போட்டிகள் என்றால் 5 நாட்கள் நடைபெறும். அதனால், தொடர் முடிய ஒரு மாதம் ஆகும். அதுவரை இந்த பாதுகாப்பு கொடுமையை அனுபவிக்க முடியாது என இலங்கை கிரிக்கெட் போர்டு சிந்தித்து வருகிறது.