கொழும்பு: அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இலங்கையின் நட்சத்திர வீரர் மலிங்கா அறிவித்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் மாதத்தில் இந்தியாவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக அனைத்து அணிகளும் தயாராகி வருகிறது.
இந்த தொடருக்காக ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட லசித் மலிங்கா திடீரென தனது ஓய்வை அறிவித்துள்ளார்.
இலங்கை அணியின் நட்சத்திர வீரரான லசித் மலிங்கா சர்வதேச டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். டி20 தொடர்களில் மட்டுமே பங்கேற்று வந்த அவர் கடைசியாக 2020ம் ஆண்டு மார்ச் மாதம் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 போட்டியில் விளையாடினார். அதன் பிறகு எந்த தொடரிலும் அவருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை.
இவர் மீண்டும் இலங்கை அணிக்கு திரும்புவார் எனக் கூறப்பட்டது. இதுகுறித்து பேசியிருந்த இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவர் விக்ரமசிங்கே, மலிங்காவை அடுத்து வரும் சர்வதேச டி20 போட்டிகளில் ஆட வைக்க முடிவு செய்துள்ளோம். இந்தாண்டு மற்றும் அடுத்த ஆண்டில் டி20 உலகக்கோப்பை தொடர் வரவுள்ளது. எனவே அதற்காக அணியை தயார் செய்ய அணியில் லசித் மலிங்கா தேவை எனக்கூறியிருந்தார்.
ஐபிஎல்: 3 இங்கிலாந்து வீரர்கள் திடீர் விலகல்.. இந்திய வீரர்கள் மீதான கோபம்.. அதிர்ச்சியில் அணிகள்!
இந்நிலையில்தான் டி20 உட்பட அனைத்துவிதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக மலிங்கா அறிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், எனது டி20 ஷூவுக்கு ஓய்வு கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. இத்தனை ஆண்டுகள் எனது பயணத்தில் உடன் இருந்த அனைவருக்கு நன்றிகள். வரும் காலங்களில் இளம் வீரர்களுக்கு எனது அனுபவத்தை பகிர்ந்துக் கொள்வேன் எனக் குறிப்பிட்டுள்ளார். இதுவரை 85 சர்வதேச டி20 களில் ஆடியுள்ள அவர் 107 விக்கெட்களை எடுத்துள்ளார்.