கொழும்பு: இலங்கை சுழற்பந்து வீச்சாளர் ரங்கண ஹெராத், டெஸ்ட் போட்டிகளில் அதிக கவனம் செலுத்துவதற்காகக ஒரு நாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
38 வயதாகும் ஹெராத், இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஆவார். தனது ஓய்வு முடிவை கிரிக்கெட் வாரியத்திற்குத் தெரிவித்து விட்டதாகவும், ஒரு நாள் போட்டிகள் மட்டுமல்லாமல் டி20 போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெற்று விட்டதாகவும் ஹெராத் கூறியுள்ளார். அவரது முடிவை இலங்கை கிரிக்கெட் வாரியம் ஏற்றுக் கொண்டு விட்டதாம்.
இதுகுறித்து ஹெராத் மேலும் கூறுகையில், அடுத்த எட்டு மாதங்களில் இலங்கை அணி 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடத் திட்டமிட்டுள்ளது. அதில் கவனம் செலுத்த நான் விரும்புகிறேன். இதன் மூலம் பல புதிய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். இதன் மூலம் 2019ல் நடைபெறவுள்ள ஒரு நாள் உலகக் கோப்பைக்கு இலங்கை அணி சிறப்பான முறையில் தயாராக முடியும் என்றார் அவர்.
சமீப காலமாக அடிக்கடி முழங்காலில் காயம் காரணமாக சரியாக விளையாட முடியாமல் இருந்து வருகிறர் ஹெராத். இதுவும் கூட அவர் ஓய்வு முடிவை அறிவிக்க முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது.
2014ல் டி20 உலகக் கோப்பையை இலங்கை வெல்ல ஹெராத்தும் முக்கியக் காரணம் ஆவார். நியூசிலாந்துக்கு எதிரான முக்கியப் போட்டியில் அவர் 3 ரன்களை மட்டுமே கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். இதுதான் டி20 போட்டிகளிலேயே மிகச் சிறந்த பந்து வீச்சாகும்.
மொத்தமாக 17 டி20 போட்டிகளில் விளையாடி 18 விக்கெட்களை ஹெராத் வீழ்த்தியுள்ளார். அதேபோல 71 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 74 விக்கெட்களைச் சாய்த்துள்ளார்.