இலங்கை சுற்றுப்பயணம் கேள்விக்குறி
இலங்கையில் வரும் ஜூலை மாதத்தின் மத்தியில் இந்திய அணியினர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக இந்த தொடர் நடைபெறுவது கேள்விக்குறியாகியுள்ளது. குறிப்பிட்ட நேரத்தில் நடத்தப்படாவிட்டாலும், கொரோனா வைரஸ் பாதிப்பை கருத்தில் கொண்டு, இந்த தொடர் பின்னர் திட்டமிடப்படும் என்று பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் போர்டு கோரிக்கை
ஜூலை மாதத்தில் திட்டமிடப்பட்டிருந்த இந்த தொடரை பாதுகாப்பான முறையில் நடத்த வேண்டும் என்றும் இந்த தொடரை நடத்த பிசிசிஐ முன்வர வேண்டும் என்றும் இலங்கை கிரிக்கெட் வாரியம் கோரிக்கை விடுத்துள்ளது. கொரோனாவை கருத்தில் கொண்டு பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இந்த போட்டிகள் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது. ஆனால் மும்பை மற்றும் பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் இந்திய வீரர்கள் முடங்கியுள்ள நிலையில் இது சாத்தியம் இல்லை என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இது எப்படி சாத்தியம்?
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வெளிநாட்டு பயணங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், இது எப்படி சாத்தியம் என்று பிசிசிஐ நிர்வாகி ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். கொரோனா வைரசை கட்டுப்படுத்த அரசு போராடிவரும் சூழலில், ஜூலை மாதத்திற்குள் நிலைமை கட்டுக்குள் வருமா என்ற சந்தேகமும் எழும்பியுள்ளது. தற்போதைய சூழலில் பாதுகாப்பே முக்கியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
உள்ளூர் போட்டிகளுக்கு முக்கியத்துவம்
அரசின் விதிமுறைகளை கவனத்தில் கொண்டு கிரிக்கெட்டில் எதிர்கால திட்டங்கள் வகுக்கப்படும் என்றும் முதலில் உள்ளூர் போட்டிகளை துவங்கி அதை பலப்படுத்திவிட்டே, பின்பு வெளிநாட்டு சுற்றுப்பயணங்களில் கவனம் செலுத்தப்படும் என்றும் அந்த நிர்வாகி தெரிவித்துள்ளார். இதுவே தற்போதைக்கு பிசிசிஐயின் திட்டம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மாத்யூ ஹேடன் ஆதரவு
காலவரையன்றி ஒத்திவைக்கப்பட்டுள்ள ஐபிஎல் 13வது சீசனை நடத்தவும் இலங்கை வாரியம் ஆர்வம் காட்டியுள்ளது. ஆஸ்திரேலிய ஜாம்பவான் மாத்யூ ஹேடனும் இந்த திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஐபிஎல்லை நடத்த முடியாத சூழலில், இலங்கை போன்ற இடங்களில் 4 சர்வதேச மைதானங்களில் பாதுகாப்பாக ஐபிஎல்லை நடத்தலாம் என்று அவர் அறிவுறுத்தியிருந்தார்.