கொழும்பு: இந்தியா - இலங்கை அணிகள் மோதும் 3வது மற்றும் கடைசி டெஸ்ட், கொழும்பு சிங்கள ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாசில் வென்ற இலங்கை முதலில் பவுலிங்கை தேர்ந்தெடுத்தது. ஆட்டம் தொடங்கிய சில மணி நேரங்களில் மழை பெய்ய தொடங்கியதால் நாள் முழுவதும் ஆட்டம் பாதிக்கப்பட்டது.
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. காலே மைதானத்தில் நடந்த முதல் டெஸ்டில், 63 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இலங்கை அணி 1-0 என முன்னிலை பெற்றது.
கொழும்பு சரவணமுத்து ஓவல் மைதானத்தில் நடந்த 2வது டெஸ்டில், அபாரமாக விளையாடிய இந்திய அணி 278 ரன் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது. இரு அணிகளும் 1-1 என சமநிலை வகிக்க, 3வது மற்றும் கடைசி டெஸ்ட் கொழும்பு எஸ்எஸ்சி மைதானத்தில் இன்று தொடங்கியது.
இந்திய அணியிலும் தொடக்க வீரர்கள் முரளி விஜய், ஷிகர் தவான், விக்கெட் கீப்பர் விருத்திமான் சாஹா ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ள நிலையில், லோகேஷ் ராகுலுடன் இணைந்து புஜாரா இன்னிங்சை தொடங்கினார்.
இந்த ஸ்டேடியம் ஆட்டம் தொடங்கிய சில மணி நேரம் மட்டும் ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்றும், அதன்பிறகு எளிதாக ரன் குவிக்க வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டது. எனவேதான் டாசில் வென்ற இலங்கை கேப்டன் மாத்யூஸ் பவுலிங்கை தேர்ந்தெடுத்தார்.
மாத்யூஸ் கணித்ததை போலவே, இலங்கை வேகப்பந்து வீச்சு அபாரமாக இருந்தது. அணியின் ஸ்கோர் 2 ரன்களாக இருந்தபோதே, 2 ரன் எடுத்திருந்த லோகேஷ் ராகுல் அவுட் ஆனார். ஆப்-ஸ்டம்ப் திசைக்கு வெளியே பிட்ச் செய்யப்பட்ட பந்து மிக அதிக கோணத்தில் உள்முகமாக திரும்பி வந்து ஸ்டம்பை பதம் பார்த்தது.
முன்னங்காலை முன்பாக வைத்து பந்தை அப்படியே விக்கெட் கீப்பரிடம் விட்டுவிட எத்தனித்த ராகுல் அதிர்ச்சிகரமாக அவுட் ஆனார். பிட்சில் புற்கள் அதிகம் இருந்ததால் பந்து அந்த அளவுக்கு ஸ்விங் ஆனது.
அணியின் ஸ்கோர் 14 ரன்களாக உயர்ந்தபோது அஜிங்ய ரஹானே 8 ரன்களில் நடையை கட்டினார். நுவான் பிரதீப் வீசிய பந்தில் அவர் எல்பிடபிள்யூ ஆனார். இந்த பந்தும் நன்கு இன்-ஸ்விங் ஆகி ரஹானேவில் கால் காப்பில் பட்டது.
பந்து தாறுமாறாக ஸ்விங் ஆனபோதும், கேப்டன் விராட் கோஹ்லி மற்றும் புஜாரா ஆகியோர் இணைந்து விக்கெட் சரிவை தடுத்தனர். 15 ஓவர்களில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 50 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டது.
மழையால் ஆட்டம் தடைபட்ட நிலையில், தொடர்ந்து விடாமல் மழை பெய்ததால், மாலை 4 மணியளவில் ஆட்டம் முடித்துக்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டது. நாளை 2வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.
இந்திய அணி விவரம்: விராட் கோஹ்லி (கேப்டன்), லோகேஷ் ராகுல், அஸ்வின், ஸ்டூவர்ட் பின்னி, அமித் மிஷ்ரா, நமன் ஓஜா (விக்கெட் கீப்பர்), செதேஷ்வர் புஜாரா, அஜிங்க்யா ரகானே, இஷாந்த் ஷர்மா, ரோகித் ஷர்மா, உமேஷ் யாதவ்.